மேல்நிலை எழுத்தர்கள் விடுப்பு எடுத்து போராட முடிவு


மேல்நிலை எழுத்தர்கள் விடுப்பு எடுத்து போராட முடிவு
x

புதுவை அரசுத்துறைகளில் காலியாக உள்ள உதவியாளர் பணியிடங்களுக்கு போட்டித்தேர்வு எழுத அறிவிப்பு வெளியிட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து மேல்நிலை எழுத்தர்கள் விடுப்பு எடுத்து போராட முடிவு செய்துள்ளனர்.

புதுச்சேரி

புதுவை அரசுத்துறைகளில் காலியாக உள்ள உதவியாளர் பணியிடங்களுக்கு போட்டித்தேர்வு எழுத அறிவிப்பு வெளியிட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து மேல்நிலை எழுத்தர்கள் விடுப்பு எடுத்து போராட முடிவு செய்துள்ளனர்.

போட்டித்தேர்வு

புதுவை அரசுத்துறைகளில் காலியாக உள்ள 600 உதவியாளர் பணியிடங்களை பதவி உயர்வு மூலம் நிரப்பவேண்டும் என்று மேல்நிலை எழுத்தர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இதுதொடர்பாக அவர்கள், முதல்-அமைச்சர் ரங்கசாமியை நேரில் சந்தித்தும் வலியுறுத்தினார்கள்.

ஆனால் பதவிஉயர்வு மூலம் நிரப்ப உயர் அதிகாரிகள் மறுப்பு தெரிவித்து வருகின்றனர். இந்தநிலையில் போட்டித்தேர்வு மூலம் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. ஜூலை மாதம் 16-ந்தேதி தேர்வுகள் நடக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இது மேல்நிலை எழுத்தர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விடுப்பு எடுத்து...

இந்தநிலையில் இன்று அவர்கள் முதல்-அமைச்சரை சந்திக்கும் விதமாக சட்டசபைக்கு வந்தனர். ஆனால் முதல்-அமைச்சரை சந்திக்காமல் பாரதி பூங்காவில் கூடி ஆலோசனை நடத்தினா். அப்போது தேர்வு முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து விடுப்பு எடுத்து போராட முடிவு செய்தனர்.

இதுதொடர்பாக ஒருங்கிணைந்த அமைச்சக ஊழியர்கள் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் ராஜேந்திரன் கூறுகையில் 'அரசுத்துறைகளில் 600 உதவியாளர் பணியிடங்களை பதவி உயர்வு மூலம் நிரப்ப அதிகாரிகள் மறுத்து வருகின்றனர். மேல்நிலை எழுத்தர்களுக்கு பதவி உயர்வு அளிப்பதன் மூலம் கூடுதலாக 600 மேல்நிலை எழுத்தர் பணியிடங்களுக்கு புதிதாக தேர்ந்தெடுக்கலாம்.

அதன் மூலம் நமது மாநிலத்தை சேர்ந்த இளைஞர் களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். அதுமட்டுமின்றி நேரடியாக உதவியாளர் களாக தேர்வு செய்யப்படுவர்களுக்கு கோப்புகள் தயாரிக்கும் பணியும் தெரியாமல் போய்விடும்.

ஒருசில அதிகாரிகள் இந்த விஷயத்தில் தவறாக செயல் படுகின்றனர். எனவே விடுப்பு எடுத்து போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு ராஜேந்திரன் கூறினார்.

மேல்நிலை எழுத்தர்கள் ஒட்டுமொத்தமாக விடுப்பு எடுத்து போராட்டம் நடத்தினால் அரசுத்துறைகளில் பணிகள் கடுமையாக பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.


Next Story