பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை


பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை
x

வில்லியனூர் அருகே பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த லாரி டிரைவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்

வில்லியனூர்

வில்லியனூர் அருகே பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த லாரி டிரைவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

10-ம் வகுப்பு மாணவிக்கு தொல்லை

வில்லியனூர் அருகே உள்ள கரிக்கலாம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த 15 வயது மாணவி ஒருவர் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். பள்ளிக்கு சென்று வந்த போது மாணவிக்கு, செல்லஞ்சேரி கிராமத்தை சேர்ந்த பூவரசன் (வயது 24), தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இதை பற்றி மாணவி, தனது பெற்றோரிடம் கூறினார். மாணவியின் தந்தை கொடுத்த புகாரின் பேரில், மங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) கிருஷ்ணன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

போக்சோவில் கைது

விசாரணையில், லாரி டிரைவரான பூவரசன், பள்ளி மாணவிக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்தது உறுதியானது. அதைத்தொடர்ந்து போக்சோ சட்டத்தின்கீழ், பூவரசனை போலீசார் கைது செய்தனர். பின்னர், அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

இது குறித்து போலீசார் கூறுகையில், '18 வயதுக்கு கீழ் இருக்கிற சிறுமிகளை பின்தொடர்ந்து சென்று, பேச முயற்சிப்பது, ஆசைவார்த்தை கூறி பேசுவது, பின்னர் ஜோடியாக புகைப்படங்கள் எடுப்பது, காதலிப்பது, பாலியல் தொல்லை கொடுப்பது போன்ற எதுவாக இருந்தாலும் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்கப்படுவர். எனவே, இளைஞர்கள் இது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம். சமீபத்திய காலங்களில் போக்சோ சட்டங்களில் சிக்கிய இளைஞர்களுக்கு அதிகபட்ச தண்டனை கொடுக்கப்பட்டு வருகிறது. இளைஞர்கள் எச்சரிக்கையாகவும், அதே நேரத்தில் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவிகள் பாதுகாப்புடன் செல்வதும் அவசியம்' என்று தெரிவித்தனர்.


Next Story