குடிநீர் தொட்டியில் தவறி விழுந்து சிறுவன் பலி


குடிநீர் தொட்டியில் தவறி விழுந்து சிறுவன் பலி
x

வில்லியனூர் அருகே தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து சிறுவன் பரிதாபமாக இறந்தான்.

வில்லியனூர்

வில்லியனூர் அருகே தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து சிறுவன் பரிதாபமாக இறந்தான்.

சிறுவன் மாயம்

புதுவை மாநிலம் வில்லியனூர் அருகே உள்ள ஜி.என்.பாளையம் அய்யனார்கோவில் தெருவை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 41). கார் டிரைவர். அவரது மனைவி ஷீலா (34). இவா்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இளைய மகன் ஜஷ்வந்த் (6). இவன் அருகில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் 1-ம் வகுப்பு முடித்துள்ளான்.

தற்போது கோடை விடுமுறை என்பதால் வீட்டில் இருந்து வந்தான். நேற்று காலை வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் திடீரென மாயமானான். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர், அவனை பல்வேறு இடங்களில் தேடினர். இருப்பினும் கண்டுபிடிக்க முடியவில்லை.

கடத்தல் புகார்

யாரோ தனது மகனை கடத்தி சென்று விட்டதாக கூறி மணிகண்டன் வில்லியனூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் வேலய்யன், சப்-இன்ஸ்பெக்டர் வேலு தலைமையிலான போலீசார் வீட்டுக்கு வந்து விசாரணை நடத்தினர். மேலும் சிறுவனையும் தேடும் பணியை முடுக்கி விட்டனர்.

அப்போது வீட்டின் அருகே உறவினர் ஒருவர் புதிதாக கட்டி வரும் வீட்டின் தரை நீர்த்தேக்க தண்ணீர் தொட்டியில் சிறுவன் ஜஸ்வந்த் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

தவறி விழுந்து சாவு

இதையடுத்து அவனது உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் சிறுவன் ஜஷ்வந்த் விளையாடும் போது தண்ணீர் தொட்டியின் மேலே போடப்பட்டிருந்த மரப்பலகை உடைந்து உள்ளே விழுந்து தண்ணீரில் மூழ்கி இறந்தது தெரியவந்தது.

இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து சிறுவன் பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story