பூக்கள் விலை கடும் உயர்வு


பூக்கள் விலை கடும் உயர்வு
x

கிறிஸ்துமஸ் பண்டிகையொட்டி மல்லிகை கிலோ ரூ.2,500-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

புதுச்சேரி

கிறிஸ்துமஸ் பண்டிகை இன்று (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்படுகிறது. அடுத்த வாரம் (ஜனவரி 1-ந் தேதி) புத்தாண்டு, பொங்கல் பண்டிகை மற்றும் மார்கழி மாதத்தில் இந்து கோவில் பண்டிகை என இந்த மாதம் முழுவதும் பண்டிகை நாட்கள் வருகிறது. இதனையொட்டி புதுவையில் பூக்கள் விலை கிடு, கிடு வென உயர்ந்துள்ளது.

இது குறித்து பூ வியாபாரி ஒருவர் கூறுகையில்,'புதுச்சேரிக்கு தமிழக பகுதியான விழுப்புரம், திண்டிவனம், திருவண்ணாமலை, ஓசூர், கர்நாடக மாநிலம் பெங்களூரு மற்றும் உள்ளூர் பகுதியான திருக்கனுர், மண்ணாடிப்பட்டு ஆகிய பகுதியில் இருந்து பூக்கள் விற்பனைக்கு வருகிறது.கிறிஸ்துமஸ் பண்டிகையொட்டி பூக்கள் விலை கனிசமாக உயர்ந்துள்ளது. கடந்த வாரம் ஒரு கிலோ ரூ.1,500-க்கு விற்ற மல்லிகை தற்போது ரூ.2,500-க்கு விற்பனையானது. புதுவைக்கு குறைந்த அளவிலேயே மல்லிகை பூ வருவதால் அதன்விலை அதிகமாக உயர்ந்துள்ளது' என்றார்.

புதுவை குபேர் மார்க்கெட்டில் நேற்று காட்டு மல்லி ரூ.800, அரும்பு ரூ.1,600, கனகாம்பரம் ரூ.800, ரோஜா ரூ.200, அரளி ரூ.240, சம்பங்கி ரூ.80, செவ்வந்தி ரூ.80, கேந்தி ரூ.70 என விற்பனையானது.


Next Story