தக்காளி கிலோ ரூ.100-க்கு விற்பனை


தக்காளி கிலோ ரூ.100-க்கு விற்பனை
x

திருக்கனூரில் தக்காளியின் விலையேற்றத்தால் புதினா சட்னிக்கு ஓட்டல்கள் மாறின. கிலோ ரூ.100-க்கு விற்பனையானது.

திருக்கனூர்

திருக்கனூர் பகுதியில் சில மாதங்களுக்கு முன்பு கிலோ 10 ரூபாய்க்கு தக்காளி என வாகனங்களில் கூவிக்கூவி விற்கப்பட்டது. ஆனால் அதுவே தற்போது கிடுகிடுவென கடுமையாக உயர்ந்தது.

நாள்தோறும் விலை ஏறி வந்த நிலையில் புதுவையில் நேற்று ஒரு கிலோ தக்காளி ரூ.80-க்கு விற்பனையானது.

இந்த நிலையில் திருக்கனூர் பகுதி கடைகளில் இன்று தக்காளி ஒரு கிலோ ரூ.100-க்கு விற்பனையானது. வரலாறு காணாத அளவுக்கு தக்காளி விலை உயர்ந்துள்ளதால் ஏழை, நடுத்தர மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதனால் சமையலில் தக்காளியை தவிர்த்து வருகின்றனர்.

கடும் விலை உயர்வால் பல ஓட்டல்களில் வாடிக்கையாளர்களுக்கு தக்காளி சட்னி பரிமாறுவது நிறுத்தப்பட்டது. அதற்கு மாறாக புதினா சட்னிக்கு ஓட்டல் உரிமையாளர்கள் தாவி உள்ளனர். விலை உயர்வில் இதேநிலை நீடித்தால் ஏழைகளின் எட்டாக் கனியாக தக்காளி மாறிவிடும்.


Next Story