கடற்கரையில் குவிந்த சுற்றுலா பயணிகள்

புதுவை கடற்கரையில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.
புதுச்சேரி
புதுவை கடற்கரையில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.
சுற்றுலா பயணிகள்
புதுச்சேரிக்கு வார இறுதி நாட்களில் வெளிமாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். மாண்டஸ் புயல் புதுவை, சென்னைக்கு இடையே கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்ததை தொடர்ந்து புதுவைக்கு சுற்றுலா பயணிகளின் வருகை இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது.
இந்தநிலையில் மாண்டஸ் புயல் சென்னை அருகே நேற்று கரையை கடந்ததை தொடர்ந்து இன்று காலை முதல் புதுவையில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். இதனால் புதுவையில் உள்ள ஓட்டல்கள், தங்கும் விடுதிகளில் அறைகள் முழுவதும் நிரம்பி வழிந்தன.
செல்பி எடுத்து மகிழ்ச்சி
சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் விதமாக இன்று காலை முதல் இதமான சூழல் நிலவியது. பாரதி பூங்கா, தாவரவியல் பூங்கா, கடற்கரை, நோணாங்குப்பம் படகு குழாம், மணக்குள விநாயகர் கோவில், அரவிந்தர் ஆசிரமம், பாண்டி மெரினா பீச், சின்ன வீராம்பட்டினம் உள்ளிட்ட சுற்றுலா தலங்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம் களை கட்டியது.
நகரின் ஒயிட் டவுன் பகுதிகளில் உள்ள கட்டிடங்களில் வரைந்துள்ள ஓவியங்களின் முன்பு சுற்றுலா பயணிகள் நின்று செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.
புதுச்சேரியில் சண்டே மார்க்கெட் செயல்படும் காந்திவீதியில் காலை முதல் பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. மாலையில் அது மேலும் அதிகரித்தது. அவர்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி சென்றனர்.






