கடற்கரையில் குவிந்த சுற்றுலா பயணிகள்


கடற்கரையில் குவிந்த சுற்றுலா பயணிகள்
x

புதுவையில் பல்வேறு சுற்றுலா தலங்களில் வெளியூர் பயணிகள் குவிந்தனர்.

புதுச்சேரி

புதுவையில் பல்வேறு சுற்றுலா தலங்களில் வெளியூர் பயணிகள் குவிந்தனர்.

சுற்றுலா பயணிகள்

புதுச்சேரிக்கு வார இறுதி நாட்களில் வெளிமாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருவார்கள். அதே போல் இன்று புதுவையில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். இதன்காரணமாக ஓட்டல்கள், தங்கும் விடுதிகளில் அறைகள் முழுவதும் நிரம்பின.

பகலில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தால் பெரும்பாலான சுற்றுலா பயணிகள் தங்கும் விடுதிகளில் முடங்கினர். சிலர் வெயில் கொடுமை தாங்க முடியாமல் பாரதி பூங்கா, தாவரவியல் பூங்காவில் தஞ்சம் அடைந்தனர். இதனால் அங்கு கூட்டம் அதிகமாக காணப்பட்டது. சிறுவர்கள் அங்குள்ள விளையாட்டு உபகரணங்களில் விளையாடினர். தாவரவியல் பூங்காவில் உள்ள உல்லாச ரெயிலில் பலரும் உற்சாகமாக பயணம் செய்து மகிழ்ந்தனர்.

கடலில் இறங்கி விளையாடினர்

மாலையில் வெயிலின் தாக்கம் குறைந்தவுடன் புதுச்சேரி கடற்கரை, நோணாங்குப்பம் படகு குழாம், மணக்குள விநாயகர் கோவில், அரவிந்தர் ஆசிரமம், பாண்டி மெரினா பீச், சின்ன வீராம்பட்டினம் கடற்கரை உள்ளிட்ட சுற்றுலா தலங்களில் சுற்றுலா பயணிகள், உள்ளூர் மக்கள் கூட்டம் களை கட்டியது.

புதுவை கடற்கரை சாலையில் திடீரென்று தோண்றிய ஒரு குழுவினர் ஜோடியாக பிளாஸ்-மாப் நடனமாடி, பொதுமக்களை உற்சாகப்படுத்தினர். சுற்றுலா பயணிகள் கடலில் இறங்கி விளையாடியும், குளித்தும் மகிழ்ந்தனர். பாண்டி மெரினா பீச்சிலும் குதிரை, ஒட்டகங்களில் சவாரி செய்தனர்.

சண்டே மார்க்கெட் செயல்படும் காந்திவீதியில் காலை முதலே பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.


Next Story