சிறுமியை சூடு வைத்து சித்ரவதை செய்த பெண் கைது


சிறுமியை சூடு வைத்து சித்ரவதை செய்த பெண் கைது
x

புதுவையில் பரிகார பூஜை செய்வதாக கூறி 13 வயது சிறுமியை சூடு வைத்து சித்ரவதை செய்த பெண்ணை போலீசார் கைது செய்தனர்.

புதுச்சேரி

புதுவையில் பரிகார பூஜை செய்வதாக கூறி 13 வயது சிறுமியை சூடு வைத்து சித்ரவதை செய்த பெண்ணை போலீசார் கைது செய்தனர்.

பரிகார பூஜை

புதுவை கோரிமேடு பகுதியை சேர்ந்தவர் முருகன். எலக்ட்ரீசியன். இவரது மனைவி லட்சுமி (வயது35). இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். இவரது வீட்டின் மாடியில் சத்தியாவதி என்பவர் வசித்து வருகிறார். இந்தநிலையில் லட்சுமியிடம், உங்கள் வீட்டில் தோஷம் உள்ளது என சத்தியாவதி கூறி இருக்கிறார்.

மேலும், பிரச்சினையை தீர்க்க சில பரிகார பூஜை செய்தால் எல்லாம் சரியாகி விடும் என லட்சுமியை நம்ப வைத்து பல்வேறு தவணைகளாக அவரிடம் இருந்து ரூ.12 லட்சத்து 39 ஆயிரமும், 37 பவுன் நகைகளை சத்தியாவதி ஏமாற்றி பறித்ததாக கூறப்படுகிறது.

சிறுமி சூடு வைத்து சித்ரவதை

மேலும் சத்தியாவதி பூஜை செய்வதுபோல நடித்து, லட்சுமியின மகளான 7-ம் வகுப்பு படித்து வரும் 13 வயது சிறுமியை அடித்தும், இரும்பு கம்பியை பழுக்க வைத்து உடலில் சூடு வைத்தும் சித்ரவதை செய்திருக்கிறார். அப்பெண் சூடு தாங்காமல் அலறினார். ஏதோ நல்லது நடக்கும் என்ற நம்பிக்கையில் லட்சுமியும் மகள் படும் அவஸ்தையை பொறுத்து கொண்டிருக்கிறார்.

பணம், நகையை இழந்த பின்னர், பரிகார பூஜையால் லட்சுமியின் குடும்பத்தில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. ஒருகட்டத்தில் மாடி வீட்டுப்பெண்ணால், தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த லட்சுமி, இதுதொடர்பாக கோரிமேடு போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் கோரிமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து, மாடி வீட்டில் வசித்த சத்தியாவதியை இன்று கைது செய்தனர்.


Next Story