கொருக்குப்பேட்டையில் வாலிபர் சரமாரியாக வெட்டிக்கொலை - அண்ணனை தேடி வந்த கும்பல் தம்பியை தீர்த்து கட்டியது


கொருக்குப்பேட்டையில் வாலிபர் சரமாரியாக வெட்டிக்கொலை - அண்ணனை தேடி வந்த கும்பல் தம்பியை தீர்த்து கட்டியது
x
தினத்தந்தி 13 Jun 2024 5:58 AM IST (Updated: 13 Jun 2024 6:37 AM IST)
t-max-icont-min-icon

கொலையான தர்மாவின் அண்ணன் சூர்யா அப்பகுதியில் அடிதடி வழக்குகளில் ஏற்கனவே சிக்கி உள்ளார்.

கொருக்குப்பேட்டை,

கொருக்குப்பேட்டையில் வாலிபர் சரமாரியாக வெட்டிக்கொலை செய்யப்பட்டார். அண்ணனை தேடி வந்த கொலை கும்பல் அவருக்கு பதிலாக தம்பியை தீர்த்துக்கட்டியது தெரியவந்தது.

சென்னை கொருக்குப்பேட்டை கருமாரியம்மன் நகரைச் சேர்ந்தவர் தர்மா (வயது 23). கட்டிட வேலை செய்து வந்தார். இவர், நேற்று முன்தினம் இரவு தனது நண்பர்களான கிஷோர் மற்றும் கோகுல் ஆகியோருடன் சேர்ந்து கொருக்குப்பேட்டை ரெயில்வே கேட் அருகே அமர்ந்து மது அருந்தி கொண்டிருந்தார்.

அப்போது அங்கு 2 மோட்டார் சைக்கிள்களில் வந்த மர்ம கும்பல் தங்களிடம் இருந்த கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் தர்மாவை சரமாரியாக வெட்டினர். ஆத்திரம் தீர அவரது வயிற்றில் சரமாரியாக வெட்டியதில் குடல் சரிந்து அதே இடத்தில் ரத்த வெள்ளத்தில் தர்மா பரிதாபமாக இறந்தார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது நண்பர்களான கிஷோர் மற்றும் கோகுல் ஆகியோர் கொலை கும்பலை தடுக்க முயன்றனர். அப்போது அவர்களையும் அந்த கும்பல் வெட்டியது. இதில் இருவரும் லேசான காயத்துடன் அங்கிருந்து தப்பி ஓடி உயிர் தப்பினார்கள். இதுகுறித்து ஆர்.கே.நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையான தர்மா உடலை பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

கொலையான தர்மாவின் அண்ணன் சூர்யா அப்பகுதியில் அடிதடி வழக்குகளில் ஏற்கனவே சிக்கி உள்ளார். இந்த முன்விரோதம் காரணமாக மர்ம கும்பல் சூர்யாவை தீர்த்துக்கட்ட வந்தனர். ஆனால் ஆள் மாறி அண்ணன் சூர்யாவுக்கு பதில் அவரது தம்பியான தர்மாவை வெட்டிக்கொன்றது போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்தது.

தப்பி ஓடிய கொலை வெறி கும்பலை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இது குறித்து வண்ணாரப்பேட்டைபோலீசார் கூறுகையில் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களில் மட்டும் முன்விரோத தகராறில் இதுவரை 3 கொலைகள் அரங்கேறி உள்ளது குறிப்பிடத்தக்கது.

1 More update

Next Story