திருச்சி விமான நிலையத்தின் புதிய முனையம் பயன்பாட்டுக்கு வந்தது


திருச்சி விமான நிலையத்தின் புதிய முனையம் பயன்பாட்டுக்கு வந்தது
x
தினத்தந்தி 11 Jun 2024 4:01 AM GMT (Updated: 11 Jun 2024 5:26 AM GMT)

திருச்சி விமான நிலையத்தின் புதிய முனையம் இன்று காலை முதல் பயன்பாட்டுக்கு வந்துள்ளது.

திருச்சி,

திருச்சி விமான நிலையத்தின் புதிய முனையம் ரூ.1,100 கோடி செலவில் கட்டப்பட்டு கடந்த ஜனவரி 2-ந் தேதி பிரதமர் மோடியால் திறக்கப்பட்டது. ஆனால் பணிகள் நிறைவுபெறாததால் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படவில்லை. தற்போது, பணிகள் நிறைவு பெற்றுள்ளன.

திருச்சி விமான நிலையத்தின் புதிய முனையத்தில் 100 சதவீத பணிகள் முடிவடைந்ததை தொடர்ந்து இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் பயன்பாட்டுக்கு வருவதாக ஏற்கெனவே தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில், திருச்சி சர்வதேச விமான நிலையத்தின் புதிய முனையம் இன்று காலை முதல் மக்கள் பயன்பாட்டுக்கு வந்தது. காலை 6 மணிக்கு முதல் விமானமாக சென்னையில் இருந்து இண்டிகோ விமானம் தரையிறங்கியதை அடுத்து, வரவேற்கும் விதமாக விமானத்தில் தண்ணீர் பீய்ச்சி அடிக்கப்பட்டது. இதன் பின்னர் பயணிகளுக்கு இனிக்கு கொடுத்து வரவேற்பு அளிக்கப்பட்டது.

உள்நாட்டு, வெளிநாட்டு விமான சேவைகள் அனைத்தும் புதிய முனையத்தில் இருந்துதான் இயக்கப்படும். 75 ஆயிரம் சதுர மீட்டரில் கட்டப்பட்டுள்ள புதிய முனையத்தில் ஆண்டுக்கு 44½ லட்சம் பயணிகளை கையாள முடியும்.


Next Story