வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 13 லட்சம் பேர் விண்ணப்பம்

பிப்ரவரி 17-ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை,
தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் நடைபெற்று வருகின்றன. எஸ்.ஐ.ஆர் கணக்கெடுபு பணி கடந்த நவ.4 முதல் டிச.14-ம் தேதி வரை நடைபெற்று வந்த நிலையில், கடந்த டிசம்பர் 19-ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதன்படி, தமிழகத்தில் 5.43 கோடி வாக்காளர்கள் உள்ளனர். 97.37 லட்சம் பேர் நீக்கப்பட்டனர். அதில், உயிரிழந்தவர்கள், முகவரி மாறியவர்கள் உள்பட 97 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டன.
இதில் இறந்தவர்கள் மட்டும் 26.94 லட்சம் பேர், முகவரியில் இல்லாதவர்கள் 66.44 லட்சம்பேர், ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் வாக்குரிமை உள்ளவர்கள் 3.98 லட்சம் பேர் நீக்கப்பட்டுள்ளனர். அதனைத் தொடர்ந்து, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, நீக்கம் உள்ளிட்டவை தொடர்பாக விண்ணப்பிக்க ஜனவரி 18-ம் தேதி வரை தேர்தல் ஆணையம் அவகாசம் அளித்திருந்தது.
இந்நிலையில் வரைவு வாக்காளர் பட்டியலில் இடம் பெறாதவர்கள் தங்களது பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்க்க இன்று கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, நீக்கம், முகவரி மாற்றம் உள்ளிட்ட திருத்தப் பணிகளுக்கு முகாம் நடத்தப்பட்டது.
இந்த நிலையில், தேர்தல் ஆணையம் அளித்திருந்த கால அவகாசம் இன்றுடன் நிறைவடைந்த நிலையில், தமிழ்நாட்டில் எஸ்.ஐ.ஆர்.க்குப் பிறகான வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயரைச் சேர்க்கக்கோரி நேற்று வரை (FORM 6) 13 லட்சத்து 3 ஆயிரத்து 487 பேர் விண்ணப்பித்துள்ளனர். வரைவு வாக்காளர் பட்டியலில் ஆட்சேபனை தெரிவித்து 35,646 பேர் (FORM 7) சமர்ப்பித்துள்ளனர். வாக்காளர் பட்டியலில் இருந்து பெயரை நீக்கக்கோரி 35,646 பேர் விண்ணப்பித்துள்ளனர்.
வாக்காளர்கள் அளிக்கும் படிவங்கள் சரிபார்க்கப்பட்டு பிப்.17ஆம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.






