சட்டசபையில் தாக்கல் செய்யப்பட உள்ள 2 முக்கிய சட்ட திருத்த மசோதாக்களின் விவரம்

கோப்புப்படம்
சட்டசபையில் தாக்கல் செய்யப்படும் இரண்டு சட்ட முன்வடிவுகளும் வெள்ளிக்கிழமை அன்று நிறைவேற்றப்பட உள்ளன.
சென்னை,
தமிழக சட்டசபையின் 2-ம் நாள் கூட்டம் இன்று கூடியுள்ளது. இதில், தமிழக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களுக்கான ஓய்வூதியம் 30 ஆயிரத்தில் இருந்து 35 ஆயிரம் ஆக உயர்த்தி வழங்கப்படுவது தொடர்பான மசோதாவை (சட்ட முன்வடிவை) சட்டசபையில் இன்று தாக்கல் செய்ய உள்ளார்.
இதேபோன்று, தமிழகத்தில் தனியார் பல்கலைக்கழகங்கள் நிறுவுவதற்கு உள்ள நிபந்தனைகளை தளர்த்துவது தொடர்பான சட்ட முன்வடிவை உயர் கல்வித்துறை அமைச்சர் கோ.வி. செழியன் தாக்கல் செய்ய உள்ளார்.
தமிழ்நாட்டில் தனியார் பல்கலைக்கழகங்களை நிறுவுவதற்காக 100 ஏக்கர் தொடர்ச்சியான நிலம் தேவைப்படுகிறது. மாநகராட்சி பகுதிகள், நகராட்சி மன்றம் மற்றும் பேரூராட்சி பகுதிகளில் செயல்படும் கல்வி நிறுவனங்கள், அந்த பகுதிகளில் அத்தகைய மிகப்பெரிய அளவிலான தொடர்ச்சியான நிலத்தை அடையாளம் காண்பது மிகவும் கடினமாக உள்ளது. பிற அண்டை மாநிலங்களின் தனியார் பல்கலைக்கழகங்களின் சட்டங்களுக்கு இணங்க நிலத்தின் தேவை குறைக்கப்பட்டால், தகுதியான மற்றும் உரிய கல்வி நிறுவனங்களின் கோரிக்கைகள் பரிசீலிக்கப்படலாம்.
எனவே, மாணவர் சமூகத்தின் நலனுக்காகவும், உயர் கல்வியை மேம்படுத்தவும், மாநிலத்தில் தனியார் பல்கலைக்கழகங்களை நிறுவுவதற்கான கொள்கை நெறிகளை எளிமைப்படுத்தவும், அதற்கான நோக்கத்திற்காக, சட்டத்தில் திருத்தம் செய்ய அரசு முடிவு செய்துள்ளது. இந்த இரண்டு சட்ட முன்வடிவுகள் வெள்ளிக்கிழமை அன்று நிறைவேற்றப்பட உள்ளன.






