தென் மாவட்டங்களுக்கு வரபிரசாதம்.. மதுரை அரசு செவிலியர் கல்லூரியில் கூடுதலாக 50 பி.எஸ்சி. நர்சிங் இடங்கள்


தென் மாவட்டங்களுக்கு வரபிரசாதம்.. மதுரை அரசு செவிலியர் கல்லூரியில் கூடுதலாக 50 பி.எஸ்சி. நர்சிங் இடங்கள்
x

மதுரை அரசு செவிலியர் கல்லூரியில் பி.எஸ்சி. நர்சிங் படிப்புக்கு கூடுதலாக 50 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளன.

மதுரை


மதுரை அரசு செவிலியர் கல்லூரியில் பி.எஸ்சி. நர்சிங் படிப்புக்கு கூடுதலாக 50 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளன. இந்த ஆண்டிலேயே கலந்தாய்வு மூலம் சேர முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தென் மாவட்டங்களில் மிக முக்கிய மருத்துவமனையாக, மதுரை ராஜாஜி அரசு ஆஸ்பத்திரி உள்ளது. இங்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான நோயாளிகள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். இதுபோல், ஏராளமானவர்கள் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றும் வருகின்றனர். இதன் அருகிலேயே, அரசு மருத்துவ கல்லூரியும், அரசு செவிலியர் கல்லூரியும் செயல்பட்டு வருகிறது. இங்கு ஏராளமான மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இதற்கிடையே, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, மதுரை அரசு மருத்துவ கல்லூரியின் மாணவர் சேர்க்கையானது, 150-ல் இருந்து 250-ஆக உயர்த்தப்பட்டது.

இந்த நிலையில், மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அதிக அளவில் நோயாளிகள் வந்து செல்வதால், நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப பி.எஸ்சி. நர்சிங் மற்றும் எம்.எஸ்சி. நர்சிங் இடங்களை அதிகப்படுத்த வேண்டும் என, 2022-ல் அப்போதைய டீன் ரத்தினவேல், அரசு செவிலியர் கல்லூரி முதல்வர் ராஜாமணி உள்ளிட்டோர் அரசுக்கு கோரிக்கை வைத்தனர். அதனை தொடர்ந்து அந்த ஆண்டே கூடுதலாக 50 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு 2022- 23-ல் அரசாணை வெளியிடப்பட்டது.

ஆனால், அந்த வருடத்தில், தமிழ்நாடு செவிலியர் குழுமம் மாணவர் சேர்க்கைக்கு உரிய அனுமதி கொடுக்கவில்லை என தெரிகிறது. இதனைதொடர்ந்து, தமிழ்நாடு செவிலியர் சங்கத்தின் சார்பில், மதுரை ஐகோர்ட்டில் பி.எஸ்சி. நர்சிங் படிப்பிற்கு கூடுதல் இடங்கள் வழங்கக்கோரி ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இதனை தொடர்ந்து, தற்போதைய டீன் அருள் சுந்தரேஷ்குமார், பி.எஸ்சி. நர்சிங் படிப்பிற்கு கூடுதல் இடங்கள் பெறுவதற்கான முயற்சிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வந்தார். அதன் தொடர்ச்சியாக, தமிழ்நாடு செவிலியர் குழுமம், எம்.ஜி.ஆர். பல்கலைக்கழகத்தின் சிறப்பு குழு சார்பில் மதுரை செவிலியர் கல்லூரியில் பல்வேறு ஆய்வுகள் நடந்தன. அந்த ஆய்வில் கூடுதல் இருக்கைகள், கட்டிட வசதிகள், போராசிரியர்கள் எண்ணிக்கை உள்ளிட்டவை குறித்து விரிவாக ஆய்வு செய்யப்பட்டது. அதன்படி, 2025-26-ம் கல்வியாண்டில் இருந்து கூடுதலாக 50 பி.எஸ்சி. நர்சிங் இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. அடுத்த வாரம் நடக்கும் கலந்தாய்வில், மாணவர்கள் மதுரையை தேர்வு செய்து கொள்ளும் வாய்ப்பு உள்ளது.

இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகிகள் கூறுகையில், “தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு, சேலம், தேனி, மதுரை உள்ளிட்ட இடங்களில் அரசு செவிலியர் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த கல்லூரிகளில் 50 பி.எஸ்சி. நர்சிங் இடங்கள் மட்டுமே உள்ளன. தற்போது மதுரைக்கு 50 இடங்கள் ஏற்கனவே உள்ள நிலையில் கூடுதலாக 50 இடங்கள் வழங்கப்பட்டுள்ளது. இது தென் மாவட்டங்களில் செவிலியர் படிக்க நினைக்கும் மாணவர்களுக்கு கிடைத்த வரபிரசாதம். இதன் மூலம் தனியார் கல்லூரிகளை தேடிச்சென்று, பல லட்ச ரூபாய் செலவு செய்து பி.எஸ்சி. நர்சிங் படிக்க வேண்டிய அவசியம் இருக்காது. கூடுதல் இடங்களை வழங்கிய தமிழக அரசுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.

மதுரையில் நர்சிங் கல்லூரி தொடங்கி கிட்டத்தட்ட 23 ஆண்டுகள் ஆகி விட்டது. பல வருட போராட்டத்திற்கு பின்னர், கூடுதலாக 50 இடங்கள் கிடைத்துள்ளது. இதுபோல், செவிலியர்களுக்கானஎம்.எஸ்சி. படிப்புக்கு 25 இடங்கள் மட்டுமே உள்ளன. கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள், பேராசிரியர்கள் எண்ணிக்கைைய அதிகப்படுத்தினால், எம்.எஸ்சி. மாணவர்களின் எண்ணிக்கையையும் அதிகரிக்க முடியும். செவிலியர் சம்பந்தமான ஆராய்ச்சி படிப்பை படிப்பதற்கும் முயற்சிக்கிறோம். அதற்கு அனுமதி கிடைக்காமல் உள்ளது. அதற்கும் அனுமதி கிடைத்தால், இன்னும் பலன் உள்ளதாக இருக்கும்” என்று அவர்கள் கூறினர்.

1 More update

Next Story