தென்காசியில் விஷம் வைத்து 50 மயில்கள் சாகடிப்பு

பயிர்களை சுற்றி நிலத்தில் எலி மருந்து (விஷம்) தடவிய மக்காச்சோளங்களை தூவியதாக கூறப்படுகிறது.
தென்காசி,
தென்காசி மாவட்டம் குருவிகுளத்தில் யூனியன் அலுவலகம் உள்ளது. இந்த அலுவலக பகுதியில் தினமும் ஏராளமான மயில்கள் சுற்றி வருவது வழக்கம். இந்த அலுவலகம் பின்னால் உள்ள மீனாட்சிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ஜான்சன். விவசாயியான இவர் தனக்கு சொந்தமான விவசாய தோட்டத்தில் 1 ஏக்கர் பரப்பளவில் மக்காச்சோளம் பயிரிட்டுள்ளார். விளைவித்த பயிர்கள் நன்கு வளர்ந்து வரும் நிலையில் அதை பறவை இனங்களில் இருந்து பாதுகாப்பதற்காக அவர் நடவடிக்கை மேற்கொண்டார். அதாவது, பயிர்களை சுற்றி நிலத்தில் எலி மருந்து (விஷம்) தடவிய மக்காச்சோளங்களை தூவியதாக கூறப்படுகிறது. நேற்று அந்த பகுதிக்கு ஏராளமான மயில்கள் வந்தன. நிலத்தில் தூவிய எலி மருந்து கலந்த பயிர்களை அவை தின்றன. இதையடுத்து சிறிது நேரத்தில் அடுத்தடுத்து மயில்கள் மயங்கி விழுந்து செத்தன.
இதை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து உடனடியாக புளியங்குடி வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். ஒட்டுமொத்தமாக சுமார் 50 மயில்கள் விஷம் வைத்து சாகடிக்கப்பட்டது தெரியவந்தது. மேலும் கால்நடை டாக்டர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் மயில்களை பிரேத பரிசோதனை செய்தனர். பின்னர் அதே இடத்தில் பொக்லைன் எந்திரம் மூலம் குழித்தோண்டி மயில்கள் புதைக்கப்பட்டன. சட்ட விரோதமாக எலிமருந்து வைத்து 50 மயில்களை சாகடித்த ஜான்சனை வனத்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






