இன்ஸ்டாகிராமில் பழக்கம்: சிறுமியை கடத்தி திருமணம் செய்த வாலிபர் போக்சோவில் கைது

கோப்புப்படம்
வாலிபருக்கு ஏற்கெனவே திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர்.
விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே உள்ள களத்திகுளம் பகுதியை சேர்ந்தவர் முனியாண்டி (24 வயது). தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். முனியாண்டிக்கும் மதுரை மாவட்டம் திருமங்கலம் பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமிக்கும் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டதாக தெரிகிறது. இருவரும் அடிக்கடி செல்போனில் பேசி வந்துள்ளனர்.
இதற்கிடையே சிறுமியை கடந்த 4 தினங்களுக்கு முன்பு திருமங்கலம் பேருந்து நிலையத்துக்கு முனியாண்டி வரவழைத்து உள்ளார். பின்னர் அவரிடம் ஆசை வார்த்தைகூறி கடத்தி சென்று திருமணம் செய்து தனியாக வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது.
இதற்கிடையே சிறுமி மாயமானதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர் இதுகுறித்து திருமங்கலம் தாலுகா போலீசில் புகார் அளித்தனர். போலீசார் விசாரணை நடத்தி, விருதுநகர் மாவட்டத்தில் இருந்த சிறுமியை மீட்டனர். மேலும் சிறுமியை திருமணம் செய்த வாலிபர் முனியாண்டியை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.






