சங்கரன்கோவிலில் இன்று ஆடித்தபசு திருவிழா கோலாகலம்: குவியும் பக்தர்கள் - போக்குவரத்து மாற்றம்

இன்று காலை 5 மணிக்கு சங்கரலிங்க சுவாமி, கோமதி அம்பாளுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது.
சங்கரன்கோவிலில் இன்று ஆடித்தபசு திருவிழா கோலாகலம்: குவியும் பக்தர்கள் - போக்குவரத்து மாற்றம்
Published on

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சங்கரநாராயணசாமி கோவில் தென் தமிழகத்தின் மிகவும் புகழ்பெற்ற சிவஸ்தலங்களில் ஒன்று. சிவன் வேறு, விஷ்ணு வேறு என்று பிளவுபடுத்துவது தவறு என்பதை பக்தர்களுக்கு உணர்த்தும் வகையில் சிவபெருமாள் கோமதி அம்பாளுக்கு ஸ்ரீ சங்கரநாராயணராக காட்சி கொடுத்தார்.

இத்தகைய அரிய நிகழ்ச்சி ஆடித்தபசு திருவிழாவாக பக்தர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு திருவிழா கடந்த 28-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

திருவிழா நாட்களில் சுவாமி, அம்பாள் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான தேரோட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது.

சிகர நிகழ்ச்சியான ஆடித்தபசு திருவிழா இன்று (வியாழக்கிழமை) நடைபெறுகிறது. இதையொட்டி இன்று காலை 5 மணிக்கு சங்கரலிங்க சுவாமி, கோமதி அம்பாளுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது.

காலை 9.30 மணிக்கு கோமதி அம்பாளுக்கு அபிஷேகம், அலங்காரம் செய்யப்படுகிறது. மதியம் 12 மணிக்கு மேல் தங்க சப்பரத்தில் கோமதி அம்பாள் ஆடித்தபசு மண்டபத்திற்கு எழுந்தருளும் நிகழ்ச்சியும், மாலை 4.15 மணிக்கு மேல் சங்கரநாராயணசாமி தபசு காட்சிக்கு புறப்பாடு நிகழ்ச்சியும் நடைபெறும்.

மாலை 6 மணிக்கு மேல் சங்கரநாராயணசாமி ரிஷப வாகனத்தில் கோமதி அம்பாளுக்கு தபசு காட்சியும், இரவு 11 மணிக்கு சங்கரலிங்கசாமி யானை வாகனத்தில் புறப்பட்டு சென்று இரவு 11.30 மணிக்கு மேல் கோமதி அம்பாளுக்கு காட்சி கொடுக்கும் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.

குவியும் பக்தர்கள்

ஆடித்தபசு திருவிழாவை காண்பதற்காக தென்காசி, நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.

தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அரவிந்த் தலைமையில் கூடுதல் மாவட்ட துணை சூப்பிரண்டு சங்கர் ஜூலியஸ் சீசர் மேற்பார்வையில், சங்கரன்கோவில் துணை போலீஸ் சூப்பிரண்டு செங்கோட்டு வேலவன் தலைமையில் 500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் முக்கிய இடங்களில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

சங்கரன்கோவில் - ஆடித்தபசு முன்னிட்டு போக்குவரத்து மாற்றங்கள் (07.08.2025)

1.திருநெல்வேலியிலிருந்து வரும் பேருந்துகள் ராஜபாளையம், மதுரை செல்லும் வழி: திருநெல்வேலியில் இருந்து வரும் பேருந்துகள் சண்முகநல்லூர் விலக்கு வழியாக சின்னகோவிலான்குளம், சூரங்குடி, தர்மத்தூரணி, நடுவக்குறிச்சி, குத்தாலப்பேரி, பொய்கைமேடு, தளவாய்புரம் வழியாக சங்கரன்கோவில், ரயில்வேபீடர் ரோடு, TB junction signal வழியாக ராஜபாளையம் மதுரை செல்ல வேண்டும்.

2.திருநெல்வேலியில் இருந்து சங்கரன்கோவில் செல்லும் சிறப்பு பேருந்துகள் தற்காலிக பேருந்து நிலையம் கோமதியம்மாள் மகளிர் மேல்நிலைபள்ளி வந்து திரும்பி செல்ல அனுமதிக்கப்படும்.

3.ராஜபாளையத்தில் இருந்து வரும் பேருந்துகள் திருநெல்வேலி செல்லும் வழி: ராஜபாளையத்திலிருந்து திருநெல்வேலி செல்லும் பேருந்துகள் அனைத்தும் பாரத ஸ்டேட் பேங்க் எதிரே உள்ள சாலை வழியாக கீதாலயா தியேட்டர் ரோடு, கருவாட்டுகடை விலக்கு, திருவேங்கடம் சாலை, புதிய பேருந்து நிலையம், கழுகுமலை ரோடு, இராமநாதபுரம் விலக்கில் வலதுபுறம் திரும்பி ராமநாதபுரம், நெடுங்குளம் விலக்கு வழியாக திருநெல்வேலி செல்ல வேண்டும்.

4.கோவில்பட்டி, திருவேங்கடத்திலிருந்து வரும் பேருந்துகள் தென்காசி, சுரண்டை, புளியங்குடி செல்லும் வழி: கோவில்பட்டி, திருவேங்கடத்தில் இருந்து வரும் பேருந்துகள் அனைத்தும் செல்வா சில்க்ஸ் சாலையில் வலதுபுறம் திரும்பி நெசவாழர் காலணி, உடப்பன்குளம் ரோடு, வையாபுரி மருத்துவமனை ஐந்துவீட்டுமனை வழியாக ராஜபாளையம் ரோடு, TB junction signal ல் வலதுபுறம் திரும்பி ரயில்வே பீடர் சாலை வழியாக தென்காசி, சுரண்டை செல்ல வேண்டும்.

5.கழுகுமலையில் இருந்து வரும் பேருந்துகள் தென்காசி, சுரண்டை செல்லும் வழி: கழுகுமலைல் இருந்து வரும் பேருந்துகள் அனைத்தும் MP house ல் இருந்து வலதுபுறம் திரும்பி புதிய பேருந்து நிலையம், திருவேங்கடம் சாலை, செல்வா சில்க்ஸ் சாலையில் வலதுபுறம் திரும்பி நெசவாளர் காலணி, உடப்பன்குளம் ரோடு, வையாபுரி மருத்துவமனை ஐந்துவீட்டுமனை வழியாக ராஜபாளையம் ரோடு, TB junction signel ல் வலதுபுறம் திரும்பி ரயில்வே பீடர் சாலை வழியாக தென்காசி, சுரண்டை செல்ல வேண்டும்.

6.தென்காசி, சுரண்டை, புளியங்குடியில் இருந்து வரும் பேருந்துகள் கோவில்பட்டி, கழுகுமலை, திருவேங்கடம் செல்லும் வழி: தென்காசி, சுரண்டை, புளியங்குடியில் இருந்து கோவில்பட்டி செல்லும் பேருந்துகள் அனைத்தும் சங்கரன்கோவில் இரயில்வே கேட், இரயில்வே பீடர் ரோடு, TB junction signel ராஜபாளையம் ரோடு, பாரத ஸ்டேட் பேங்க் எதிரே உள்ள சாலை வழியாக கீதாலயா தியேட்டர் ரோடு, கருவாட்டுகடை விலக்கு, திருவேங்கடம் சாலை, புதிய பேருந்துநிலையம் தற்காலிக பேருந்து நிலையம் வந்து கோவில்பட்டி, கழுகுமலை, திருவேங்கடம் செல்ல வேண்டும்.

7.ராஜபாளையம் ரோடு கல் மண்டபம், தீயணைப்புதுறை நிலையம் அருகில் தற்காலிக பேருந்து நிலையம் இயக்கப்படும்.

8.திருவேங்கடம் ரோடு புதிய பேருந்து நிலையத்தில் தற்காலிக பேருந்து நிலையம் இயக்கப்படும்.

9.சுரண்டை ரோடு சுரண்டை ஜங்சன் ல் தற்காலிக பேருந்து நிலையம் இயக்கப்படும்.

10.திருநெல்வேலி ரோடு கோமதியம்மாள் மகளிர் மேல்நிலைபள்ளி அருகில் தற்காலிக பேருந்து நிலையம் இயக்கப்படும்.

சங்கரன்கோவில் ஆடித்தபசு திருவிழா 07.08.2025 அன்று கனரக வாகனங்கள் லாரி, டாரஸ் லாரி, கன்டைனர், ட்ரைலர் லாரி ஆகிய அனைத்து கனரக வாகனங்கள் சங்கரன்கோவில் நகர் பகுதி வழியாக செல்ல அனுமதி இல்லை.

கனரக வாகனங்கள் செல்லும் வழிகள்...

1.கோவில்பட்டி, கழுகுமலை வழியாக வரும் கனரக வாகனங்கள் அனைத்தும் குருவிகுளம், திருவேங்கடம் பருவக்குடி விலக்கு வழியாக தென்மலை சிவகிரி வழியாக தென்காசி செல்ல வேண்டும்.

2.திருவேங்கடம் வழியாக வரும் கனரக வாகனங்கள் அனைத்தும் திருவேங்கடம் பருவக்குடி விலக்கு வழியாக தென்மலை சிவகிரி வழியாக தென்காசி செல்ல வேண்டும்.

3.திருநெல்வேலி வழியாக வரும் கனரக வாகனங்கள் அனைத்தும் சண்முகநல்லூர் விலக்கு சின்னகோவிலான்குளம் நடுவக்குறிச்சி வீரசிகாமணி, பாம்புகோவில், புளியங்குடி ரோடு வழியாக சிந்தாமணி, வாசுதேவநல்லூர் வழியாக மதுரை,ராஜபாளையம் செல்ல வேண்டும்.

4.தென்காசி வழியாக வரும் கனரக வாகனங்கள் அனைத்தும் கடையநல்லூர், புளியங்குடி, வாசுதேவநல்லூர், சிவகிரி, ராஜபாளையம் வழியாக விருதுநகர், மதுரை செல்ல வேண்டும்.

பொதுமக்கள் அனைவரும் காவல்துறைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கி பாதுகாப்பாக பயணம் செய்யுமாறு தென்காசி மாவட்ட காவல்துறை சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com