நிலமற்ற வேளாண் தொழிலாளர்களுக்கான விபத்து மரண இழப்பீடு ரூ.2 லட்சமாக உயர்வு - முதல்-அமைச்சர் அறிவிப்பு

விபத்தினால் ஏற்படும் உடல் உறுப்பு இழப்பிற்காக வழங்கப்பட்டு வரும் நிதி உதவியை ரூ.1 லட்சமாக உயர்த்தி மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
சென்னை,
நிலமற்ற வேளாண் தொழிலாளர்களுக்கான விபத்து மரண இழப்பீட்டுத் தொகையை ரூ.1 லட்சம் என்பதில் இருந்து ரூ.2 லட்சமாக உயர்த்தி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;-
“2025-2026 ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் வேளாண்மை - உழவர் நலத்துறை அமைச்சர் நிலமற்ற வேளாண் தொழிலாளர்களுக்கு, விபத்து மரணத்துக்கான இழப்பீடு, விபத்தினால் ஏற்படும் உடல் உறுப்பு இழப்பிற்கு நிதி உதவி, இயற்கை மரணத்துக்கான நிதி உதவி, இறுதிச்சடங்கு செய்வதற்கான நிதி உதவி ஆகியவை உயர்த்தி வழங்கப்படும் என அறிவித்தார். இதற்குரிய அரசாணை கடந்த 4-ந்தேதி வெளியிடப்பட்டது.
அந்த அறிவிப்பின்படி, நிலமற்ற வேளாண் தொழிலாளர்களுக்கு விபத்து மரணத்துக்காக வழங்கப்பட்டு வரும் இழப்பீட்டுத் தொகை ரூ.1 லட்சம் என்பதை ரூ.2 லட்சம் என்றும், விபத்தினால் ஏற்படும் உடல் உறுப்பு இழப்பிற்காக வழங்கப்பட்டு வரும் நிதி உதவி ரூ.20 ஆயிரம் என்பதை ரூ.1 லட்சம் என்றும், இயற்கை மரணத்துக்காக வழங்கப்பட்டு வரும் நிதி உதவி ரூ.20 ஆயிரம் என்பதை ரூ.30 ஆயிரம் என்றும், இறுதிச்சடங்குக்காக வழங்கப்பட்டு வரும் நிதி உதவி ரூ.2,500 என்பதை ரூ.10 ஆயிரம் என்றும் உயர்த்தி வழங்கிட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.”
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






