கரூர் சம்பவம் தொடர்பாக நடிகர் அஜித் கருத்து; உதயநிதி ஸ்டாலின் கூறியது என்ன...?

முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்பே இதற்கு பதில் அளித்து இருக்கிறார். நானும் தெளிவாக பேட்டி அளித்து இருக்கிறேன் என உதயநிதி ஸ்டாலின் கூறினார்.
சென்னை,
கரூரில் வேலுசாமிபுரம் பகுதியில் த.வெ.க. தலைவர் விஜய் கடந்த செப்டம்பர் 27-ந்தேதி மேற்கொண்ட பிரசாரத்தின்போது, ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியானார்கள். இந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக நடிகர் அஜித் யூடியூப் சேனல் ஒன்றிற்கு அளித்த பேட்டியில், கரூர் கூட்ட நெரிசலை வைத்து தமிழ்நாட்டில் நிறைய நடந்து விட்டது.
கரூர் சம்பவத்திற்கு விஜய் மட்டும் பொறுப்பு அல்ல, நாம் எல்லோருமே பொறுப்பு. ரசிகர்களின் அளவு கடந்த எல்லையற்ற அன்பு இதுபோன்ற நிகழ்வுகளை உருவாக்குகிறது. கூட்டத்தால் நாம் மிகவும் வெறித்தனமாகி விடுகிறோம். இது முழு சினிமா துறையையும் மோசமாக காட்டுகிறது.
இந்த மீடியாவும் படங்களின் முதல் நாள் முதல் ஷோவை ரசிகர்கள் அது செய்தார்கள் இது செய்தார்கள் என பெரிதாக்கி காட்டுகிறது. இது ரசிகர்கள் மனதை மாற்றுகிறது. அன்பு வையுங்கள் போதும். ரசிகர்கள் என் மீது பொழியும் அன்புக்கு நான் எப்போதும் நன்றிக்கடன் பட்டு இருக்கிறேன்.
ஆனால் அதே அன்பு காரணமாகத்தான் நான் குடும்பத்துடன் வெளியில் செல்வதில்லை. என் மகனை கூட நான் பள்ளிக்கு கொண்டு சென்று விட முடியாத நிலை இருக்கிறது என்று தெரிவித்துள்ளார். அஜித்தின் கருத்துக்கு விஜய் ரசிகர்களும், த.வெ.க. தொண்டர்களும் வரவேற்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம், கரூர் சம்பவம் பற்றிய நடிகர் அஜித்தின் கருத்து குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த அவர், முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்பே இதற்கு பதில் அளித்து இருக்கிறார். நானும் தெளிவாக பேட்டி அளித்து இருக்கிறேன். ஒவ்வொருவருக்கும் பொறுப்பு இருக்கிறது. இதுபற்றி பல்வேறு கட்சி தலைவர்களும் பதில் அளித்துள்ளனர் என கூறினார்.
தொடர்ந்து அவர், இதற்கான பேட்டியை அளிக்க வேண்டியவரிடம் நீங்கள் இன்னும் பேட்டி எடுக்க முயற்சிக்கவில்லையா? அல்லது பேட்டி கொடுக்க விரும்பவில்லையா? என்பது எனக்கு தெரியவில்லை என்றார். சி.பி.ஐ. விசாரணைக்கு கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.
அதனால், அதுபற்றி கருத்து கூற விரும்பவில்லை. நடிகர் அஜித்தின் பேட்டியை நான் இன்னும் முழுமையாக பார்க்கவில்லை. அதனால், அதுபற்றி நான் எதுவும் கருத்து கூற விரும்பவில்லை. அது, அவருடைய சொந்த கருத்து. அது எந்த கருத்து என்றாலும் பாராட்டத்தக்கது என கூறியுள்ளார்.






