சென்னை: ரூ.18.24 கோடி மதிப்பில் கட்டப்பட்ட துணைமின் நிலையத்தை தொடங்கி வைத்தார் உதயநிதி ஸ்டாலின்


சென்னை: ரூ.18.24 கோடி மதிப்பில் கட்டப்பட்ட துணைமின் நிலையத்தை தொடங்கி வைத்தார் உதயநிதி ஸ்டாலின்
x

பிராட்வேயில் 33/11 கி.வோ. துணைமின் நிலையத்தை திறந்து வைத்து, மின்விநியோகத்தை உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

சென்னை,

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:-

தமிழ்நாடு முதல்-அமைச்சர் சென்னை முழுவதும் சீரான மற்றும் விரிவான வளர்ச்சியை உறுதி செய்யும் வகையில் வட சென்னை பகுதிகளில் பல்வேறு முக்கியமான திட்டப் பணிகளை செயல்படுத்துவதற்காக வடசென்னை வளர்ச்சித் திட்டத்தை தொடங்கி வைத்தார். இத்திட்டத்தின் கீழ், தமிழ்நாடு மின்சார வாரியத்தின் சார்பில் 1034.24 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 16 திட்டப்பணிகள் மேற்கொள்ளவதற்காக, தமிழ்நாடு மின்சார வாரியம் 1000.39 கோடி ரூபாயும், சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் 33.85 கோடி ரூபாயும் நிதி பங்கீடு செய்து வழங்கியதன் அடிப்படையில், பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதனடிப்படையில் துறைமுகம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சென்னை பிராட்வே, டேவிட்சன் சாலையில், தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகத்தின் சார்பில் 18.24 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டு நிறுவப்பட்டுள்ள பிராட்வே 33/11 கி.வோ. துணைமின் நிலையத்தை தமிழ்நாடு துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று (28.12.2025) திறந்து வைத்து, மின்விநியோகத்தை தொடங்கி வைத்தார்.

இன்றைய தினம் தொடங்கி வைக்கப்பட்ட புதிய 33/11 கி.வோ. துணைமின் நிலையம், மின்னூட்டம் பெற்று 5 புதிய 11 கி.வோ மின் பாதைகள் வாயிலாக 2X8 எம்.வி.ஏ திறனுடைய மின்மாற்றிகள் மூலமாக மின்சாரம் பகிர்ந்தளிக்கப்படுவதன் மூலமாக வடசென்னை பகுதியில் குறைந்த மின் அழுத்த குறைபாட்டினை நிவர்த்தி செய்து, தடையற்ற மற்றும் மின்னழுத்த ஏற்ற இறக்கமின்றி சீரான மின் விநியோகம் வழங்க உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த புதிய துணை மின்நிலையம் மூலம் பிராட்வே, மண்ணடி, சவுக்கார்பேட்டை, கொத்தவால் சாவடி, என்.எஸ்.சி போஸ் ரோடு, முத்தையால் பேட்டை மற்றும் ஏழு கிணறு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வணிக மற்றும் வீடுகளுக்கான மின்நுகர்வோர்கள் சுமார் பதினைந்தாயிரத்திற்க்கும் மேற்பட்டோர் சீரான மற்றும் தடையற்ற மின்சாரம் பெற்று பயன் அடைவார்கள்.

மேலும், ஏற்கனவே உள்ள கிழக்கு ஜார்ஜ் டவுன், பூக்கடை 33/11 கி.வோ துணை மின் நிலையங்கள் மற்றும் உயர்நீதிமன்ற 110 கி.வோ துணை மின் நிலையத்திலும் உள்ள சுமார் 10 எம்.வி.ஏ மின் பளு இன்று முதல் குறைக்கப்பட்டு, இத்துணை மின் நிலையத்தின் வாயிலாக மின் விநியோகம் செய்யப்படும்.

இந்நிகழ்ச்சியில், போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர், இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் ஆர். பிரியா, சட்டமன்ற உறுப்பினர் ஜோசப் சாமுவேல், கூடுதல் தலைமைச் செயலாளர் /தமிழ்நாடு மின் பகிர்மான கழக தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் ஜெ.ராதாகிருஷ்ணன், எரிசக்தித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் (பொ) மங்கத் ராம் சர்மா, தமிழ்நாடு மின் பகிர்மான கழக இயக்குநர் (பகிர்மானம்) அ.செல்வகுமார், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story