சென்னை: பெண் தூய்மை பணியாளரை தாக்கிய வாலிபர் கைது

பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் வாலிபர் கைது செய்யப்பட்டார்.
சென்னை,
சென்னை கொருக்குப்பேட்டையைச் சேர்ந்தவர் லட்சுமி (வயது 43). இவர், சென்னை மாநகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் வேப்பேரி பகுதியில் தூய்மை பணியாளராக வேலை பார்த்து வருகிறார். இவர், எழும்பூர் காந்தி இர்வின் பாலம் மற்றும் ஈ.வெ.ரா சாலை சந்திப்பு அருகே நடைபாதையில் தூய்மை பணியை மேற்கொண்டிருந்தார். இதனால் அந்த வழியாக வந்த நபரை ஓரமாக செல்ல அறிவுறுத்தினார்.
தமிழ் தெரியாத அந்த நபர், இந்தியில் தகாத வார்த்தைகளால் பேசி லட்சுமியை தாக்கி உள்ளார். பின்னர் அவருக்கு கொலை மிரட்டல் விடுத்து சென்றுள்ளார். இதுபற்றி லட்சுமி அளித்த புகாரின்பேரில் எழும்பூர் போலீசார் நடத்திய விசாரணையில் சென்னையில் தங்கி பணியாற்றி வரும் ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ரஜவ்ரி மாவட்டத்தை சேர்ந்த ரவீந்திர சிங் (25) என்பவர்தான் தூய்மை பணியாளர் லட்சுமியை தாக்கியது தெரிய வந்தது. பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் அவர் கைது செய்யப்பட்டார்.






