அமெரிக்க பெண்ணை கரம்பிடித்த கோவை இளைஞர்... தமிழ் கலாசாரப்படி நடந்த திருமணம்

கோவை கொடிசியா வளாகத்தில் கடந்த வியாழக்கிழமை காலை திருமணம் நடைபெற்றது.
கோயம்புத்தூர் மாவட்டம் நவ இந்தியா பகுதியைச் சோந்த மோகன் - பிரேமலதா தம்பதியின் மகன் கௌதம் (30 வயது). இவர் கனடாவில் பள்ளி மற்றும் கல்லூரி என 11 ஆண்டுகள் பயின்றுள்ளார். கௌதம் தன்னுடன் கல்லூரியில் பயின்ற அமெரிக்கா வாஷிங்டன் டி.சி. பகுதியைச் சோந்த ராப்ட் டக்ளஸ் பிராட் - எலினிட்டா யசன்யா பிராட் தம்பதியின் மகள் சாரா (30 வயது) என்பவருடன் பழகி உள்ளார்.
கடந்த 2019-ம் ஆண்டு கல்லூரி பட்டமளிப்பு விழா நிகழ்ச்சியில் பங்கேற்ற தங்களது பெற்றோரிடம் திருமணம் செய்து வைக்கும்படி இருவரும் கேட்டு உள்ளனர். மேற்படிப்பு முடிந்த பிறகு திருமணம் செய்து வைப்பதாக பெற்றோர் உறுதி அளித்த நிலையில், கௌதமும், சாராவும் பட்ட மேற்படிப்பை முடித்து கனடாவில் உள்ள மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளனர்.
இந்த நிலையில் மணமகளின் பெற்றோர் தமிழ் கலாசாரத்தின் மீது பற்று கொண்டவர்கள் என்பதால் தங்களது மகளுக்கு தமிழ்நாட்டில், தமிழ் கலாசார முறைப்படி திருமணம் செய்ய விரும்பினர். இதையடுத்து கடந்த 15 நாட்களுக்கு முன்பு அவர்கள் கோவை வந்தனர்.
கோவை கொடிசியா வளாகத்தில் கடந்த வியாழக்கிழமை காலை திருமண சடங்குகள் நடைபெற்றன. அப்போது சாராவின் கழுத்தில் மாங்கல்யம் அணிவித்து கௌதம் திருமணம் செய்து கொண்டார். இந்த திருமண விழாவில் அமெரிக்கா, கனடா நாட்டைச் சேர்ந்த மணமகளின், உறவினர்கள் நண்பர்கள் பங்கேற்றனர்.






