இந்திய கம்யூ. மூத்த தலைவர் நல்லகண்ணு மருத்துவமனையில் அனுமதி

சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக நல்லகண்ணு அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு (வயது 100). இவர் கடந்த ஆகஸ்ட் 22-ந்தேதி வீட்டில் கீழே விழுந்ததில் தலையில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் சென்னை நந்தனத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். தலையில் தையல் போடப்பட்டு, தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த நல்லக்கண்ணுவை டாக்டர்கள் குழுவினர் கண்காணித்து வந்தனர்.
நல்லகண்ணுவுக்கு வயது மூப்பின் காரணமாக நுரையீரல் தொற்று ஏற்பட்டுள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதையடுத்து உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதைத் தொடர்ந்து நல்லகண்ணு கடந்த செப்டம்பர் 11-ந்தேதி வீடு திரும்பினார். இதையடுத்து, உடல்நலக்குறைவு காரணமாக அக்டோபர் 16ம் தேதி நல்லகண்ணு மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர், சிகிச்சைக்குப்பின் அவர் வீடு திருப்பினார்.
இந்நிலையில், நல்லகண்ணு மீண்டும் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மூச்சுத்திணறல் காரணமாக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக நல்லகண்ணு அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் விரைவில் உடல்நலம் பெற்று வீடு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.






