காங்கிரஸ் கட்சியில் இருந்து சித்துவின் மனைவி இடைநீக்கம்

முதல்-மந்திரி பதவியில் அமர ரூ.500 கோடி பணம் கொடுக்கும் வசதி எங்களிடம் இல்லை என்று கவுர் சித்து கூறியிருந்தார்.
புதுடெல்லி,
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் கிரிக்கெட் வீரருமான நவ்ஜோத் சிங் சித்து சமீப காலமாக காங்கிரஸ் நிகழ்ச்சிகள் எதிலும் கலந்து கொள்ளாமல் இருந்து வருகிறார். மக்களவை தேர்தலிலும் கூட பிரசாரம் செய்யவில்லை. அதோடு கடந்த ஆண்டு முதல் மீண்டும் கிரிக்கெட் வர்ணனையாளராக தனது வாழ்க்கையை தொடங்கி இருக்கிறார்.
இந்தநிலையில், அரசியல் கட்சிகளுக்கு ரூ.500 கோடி கொடுத்து முதல்-மந்திரி பதவியை வாங்க எங்களிடம் பணம் இல்லை. ஆனால் எங்களால் பஞ்சாப்பை தங்க மாநிலமாக மாற்ற முடியும் என நவ்ஜோத் சிங் மனைவி கவுர் சித்து கூறினார். மேலும் சித்துவிடம் அதிகாரத்தை கொடுத்தால் பஞ்சாப்பை மேம்படுத்துவார். எங்களிடம் எந்தக் கட்சிக்கும் கொடுக்க பணம் இல்லை. காங்கிரஸ் கட்சியில் ஏற்கனவே உட்கட்சி சண்டை இருக்கிறது.
காங்கிரஸ் கட்சியில் 5 முதல்-மந்திரி வேட்பாளர் முகங்கள் இருக்கின்றன. அவர்கள் சித்துவை முன்னுக்கு வரவிடமாட்டார்கள். பாஜக அவருக்கு பதவி வழங்கினால் அக்கட்சியில் சேர்வாரா என்பது குறித்தெல்லாம் நான் கருத்து தெரிவிக்க முடியாது என கவுர் சித்து தெரிவித்தார். நவ்ஜோத் கவுர் சித்துவின் இந்த பேச்சு பஞ்சாப் அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது. பஞ்சாபில் 2027-ல் தேர்தல் நடைபெற உள்ளது.
இந்தநிலையில், காங்கிரஸ் கட்சியில் இருந்து நவ்ஜோத் சிங் சித்துவின் மனைவி கவுர் தற்காலிகமாக நீக்கம் செய்யப்பட்டுள்ளார். சித்துவை பஞ்சாப் முதல்-மந்திரி வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என கவுர் கோரியிருந்த நிலையில் காங்கிரஸ் நடவடிக்கை எடுத்துள்ளது.






