16-ம் தேதிக்குள் உப்பள தொழிலாளர்களுக்கு தீபாவளி போனஸ்: பேச்சுவார்த்தையில் உடன்பாடு

தூத்துக்குடியில் உப்பளங்களுக்கு ஆண்டுதோறும் முழுமையாக வேலைக்கு வந்த ஆண் தொழிலாளர்களுக்கு ரூ.10,000, பெண் தொழிலாளர்களுக்கு ரூ.9,675 தீபாவளி போனஸ் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
தூத்துக்குடியில் உப்பள தொழிலாளர்களுக்கு 2025-ம் ஆண்டு தீபாவளி போனஸ் வழங்குவது சம்பந்தமாக உப்பு உற்பத்தியாளர்கள் மற்றும் தொழிற்சங்க நிர்வாகிகளுக்கு இடையே பேச்சுவார்த்தை, உப்பு சங்க அலுவலகத்தில் சிறிய அளவு உப்பு உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் சந்திரமேனன் தலைமையில் நடைபெற்றது.
சங்க செயலாளர் விஜயசேகர், முன்னாள் செயலாளர் தனபாலன், உப்பு உற்பத்தியாளர்கள் ஸ்ரீகாந்த், லட்சுமணன் மற்றும் தி.மு.க. சார்பில் பாலசுப்பிரமணியன், மாடசாமி, சி.ஐ.டி.யு. சார்பில் பொன்ராஜ், ஐ.என்.டி.யு.சி. சிறுபான்மை பிரிவு சார்பில் பாக்யராஜ், அ.தி.மு.க. சார்பில் குருசாமி, அருணா, ஏ.ஐ.டி.யு.சி. சார்பில் பரமசிவம், ஐ.என்.டி.யு.சி. சார்பில் ராஜு உட்பட 7 தொழிற்சங்கத்தினர் பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டனர்.
பேச்சுவார்த்தையின் முடிவில் ஆண்டுதோறும் முழுமையாக வேலைக்கு வந்த ஆண் தொழிலாளர்களுக்கு ரூ.10,000, பெண் தொழிலாளர்களுக்கு ரூ.9,675 தீபாவளி போனஸ் வழங்குவது, ஆண்டுக்கு 9 நாள் விடுமுறை சம்பளமாக ஆண்களுக்கு ரூ.5,400, பெண்களுக்கு ரூ.5,310 மற்றும் காலணி, கையுறை வாங்க ரூ.400 வழங்குவது என்றும், இந்த பணத்தை வருகிற 16-ம் தேதிக்குள் வழங்க வேண்டும் என்றும் முடிவு செய்யப்பட்டது.






