சென்னையில் களைகட்டியது தீபாவளி விற்பனை : ஜவுளி, இனிப்பு, பட்டாசு கடைகளில் மக்கள் கூட்டம்

ஆட்டோமொபைல் கடைகளிலும் மக்கள் கூட்டம் வழக்கத்தைவிட அதிகமாக இருந்து வருகிறது.
தீபாவளி பண்டிகை நாளை (திங்கட்கிழமை) உற்சாகமாக கொண்டாடப்பட உள்ளது. தீபாவளி என்றாலே புது துணி, பட்டாசு, இனிப்புகள்தான் நினைவுக்கு வரும். அந்தவகையில் இன்று புத்தாடை வாங்குவதற்காக ஜவுளிக்கடைகளில் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்து வருகிறது. சென்னையில் இன்று காலையில் இருந்து மேகக்கூட்டங்களுடன் மழை விட்டு விட்டு பெய்தபடியே காணப்பட்டது. கொட்டும் மழையிலும் ஜவுளிக்கடைகளை நோக்கி மக்கள் சென்ற வண்ணம் இருந்து வருகின்றனர்.
தியாகராயநகர், வண்ணாரப்பேட்டை, புரசைவாக்கம், சவுகார்பேட்டை உள்ளிட்ட சென்னையில் முக்கிய கடைத்தெருக்களில் மழையில் குடைப்பிடித்தபடி சென்று தீபாவளி ‘ஷாப்பிங்' செய்து வருகின்றனர். தியாகராயநகரில் எங்கு திரும்பினாலும், ஏதோ குடைகள் நகர்ந்து செல்வது போன்ற காட்சியே இன்று காலையில் அரங்கேறியது.
கடைசிநேர விற்பனை என்பதற்காக இருக்கும் துணிகளை மட்டுமே காட்சிப்படுத்தாமல், ஏற்கனவே எப்படி விற்பனைக்காக துணிகளை காட்சிப்படுத்தி இருந்தார்களோ, அதேபோல் ஜவுளி கடைக்காரர்கள் துணி வகைகளை அடுக்கி வைத்திருந்தனர். மக்கள் தங்களுக்கு பிடித்த டிசைன், கலரில் துணிகளை தேர்வு செய்து மகிழ்ச்சியுடன் வாங்கி செல்கின்றனர்.
ஜவுளிக்கடைகளை தொடர்ந்து, இனிப்பு, காரம் விற்பனை கடைகளிலும் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்து வருகிறது. ஏற்கனவே ஆர்டர் கொடுத்தவர்கள், அதனை கடைகளில் கேட்டு ஆர்வமுடன் வாங்கிச் செல்கின்றனர்.
பலர் அந்த நேரத்தில் என்ன புதுவகையான இனிப்புகள் கடைகளில் விற்பனைக்காக இருந்ததோ, அதனை கேட்டு வாங்குகின்றனர். அதிலும் நெய் ஸ்வீட்ஸ், காஜூ கட்லி உள்ளிட்ட சில இனிப்பு வகைகளின் விற்பனை படுஜோராக இருந்து வருகிறது. சில பெரிய கடைகளில் புது ஆர்டர்கள் எடுக்க கடைக்காரர்கள் தயக்கம் காட்டி வருகின்றனர்.
பெரிய ஆர்டர் என்றாலும், இப்போது எங்களால் அதை செய்து கொடுக்க முடியாது என்று சொல்லும் அளவுக்கு படு பிசியாக விற்பனை நடந்து வருகிறது. இனிப்பு மட்டுமல்லாது, கார வகைகளிலும் புதிய ரகங்கள் விற்பனைக்கு வந்திருந்ததையும், அதனை கேட்டு வாங்கிச் சென்றதையும் பல இடங்களில் பார்க்க முடிந்தது.
கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு ஆரம்பத்தில் விற்பனையில் சற்று சுணக்கம் இருந்தாலும், கடந்த சில நாட்களாக விற்பனை நன்றாக இருப்பதாக வியாபாரிகள் தெரிவித்தனர். பண்டிகைக்கு இன்று ஒருநாள் இடைவெளி இருப்பதால், விற்பனை இன்னும் அதிகரிக்கும் என்றே வியாபாரிகள் எதிர்பார்க்கிறார்கள்.
சூடுபிடித்த பட்டாசு விற்பனை
பட்டாசு விற்பனை சென்னையில் மழை காரணமாக நேற்று சற்று மந்தமாக இருந்தது. சென்னை தீவுத்திடலில் அமைக்கப்பட்டிருந்த பட்டாசு கடைகளில் நேற்று காலையில் மக்கள் நடமாட்டமே இல்லாத சூழல் காணப்பட்டது. ஒவ்வொரு கடையிலும் ஓரிரு நபர்களே நின்று வாங்கிக்கொண்டு இருந்தனர். இந்த ஆண்டு புதுரக பட்டாசுகள் மக்களை கவரும் வகையில் விற்பனைக்கு வந்திருக்கிறது.
வியாபாரத்துக்கு மழை சற்று இடம் கொடுத்தால் விற்பனை நன்றாக இருக்கும் என்றும், இன்றும் மழை குறுக்கிட்டால் முதலுக்கு மோசம் ஆகிவிடும் என்றும் வியாபாரிகள் கவலையோடு தெரிவித்தனர். நேற்று பிற்பகலுக்கு பிறகு மழை வழிகொடுத்ததால், பட்டாசு கடைகளை நோக்கி மக்கள் செல்லத் தொடங்கினர். இதனால் பட்டாசு கடைகளில் விற்பனை சூடுபிடிக்கத் தொடங்கியதாக பட்டாசு விற்பனையாளர் நலச்சங்க செயல் தலைவர் ஷேக் அப்துல்லா தெரிவித்தார்.
களை கட்டியது
சமீபத்தில் வாகனங்களுக்கான ஜி.எஸ்.டி. குறைக்கப்பட்டதால், அதன் விலை ஏற்கனவே இருந்த விலைகளை விட குறைந்து இருந்தது. இதனுடன் ஒவ்வொரு கார் நிறுவனங்களும், கூடுதல் சலுகைகளையும் அறிவித்து இருந்தனர். இதனால் மோட்டார் சைக்கிள்கள், கார்களை ‘புக்கிங்' செய்வதிலும் சிலர் ஆர்வம் காட்டினார்கள். அதற்கேற்றாற்போல், ஆட்டோமொபைல் கடைகளிலும் மக்கள் கூட்டம் வழக்கத்தைவிட அதிகமாக இருந்து வருகிறது.
மொத்தத்தில் சென்னையில் கொட்டும் மழையிலும் தீபாவளி விற்பனை இன்று களைகட்டி வருகிறது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது இந்த ஆண்டு தீபாவளிக்கு முந்தைய நாட்களில் விற்பனை நன்றாக இருந்ததாகவே ஜவுளி, இனிப்பு கடைக்காரர்கள் தெரிவித்தனர். பட்டாசு விற்பனையை பொறுத்தவரையில் இன்று நடக்கும் விற்பனையை பொறுத்தே அதனை கணிக்க முடியும் என தெரிவித்துவிட்டனர்.






