கலை இயக்குனர் தோட்டா தரணிக்கு எடப்பாடி பழனிசாமி வாழ்த்து

தோட்டா தரணிக்கு "செவாலியர்" விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
கலை இயக்குனர் தோட்டா தரணிக்கு எடப்பாடி பழனிசாமி வாழ்த்து
Published on

சென்னை,

இந்திய அளவில் தடம் பதித்த தமிழ் சினிமாவின் ஆஸ்தான கலை இயக்குனர் தோட்டா தரணி 64 ஆண்டுகளாக திரைத்துறைக்கு தனது பங்களிப்பை அளித்து வருகிறார். இந்நிலையில் தோட்டா தரணியின் கலைத் துறைப் பங்களிப்பைப் பாராட்டி, அவருக்குப் பிரான்ஸ் நாட்டின் உயரிய விருதான "செவாலியர்" விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

கலை, இலக்கியம் மற்றும் அறிவியலில் சிறந்து விளங்குபவர்களைக் கவுரவிக்கும் விதமாக பிரான்ஸ் அரசு, 1957-ம் ஆண்டு முதல் செவாலியர் விருதை வழங்கி வருகிறது. முன்னதாக தமிழ் சினிமாவில் மறைந்த பழம்பெரும் நடிகர் சிவாஜி கணேசன் (1995), கமல்ஹாசன் (2016) உள்ளிட்டோர் இந்த விருதைப் பெற்றுள்ளனர். தற்போது, அந்தப் பட்டியலில் தோட்டா தரணியும் இணைந்துள்ளார்.

நாளை (13-ம் தேதி) சென்னையில் உள்ள அலையன்ஸ் பிரான்சைஸ் வளாகத்தில் நடைபெறும் விழாவில் தோட்டா தரணிக்கு செவாலியர் விருது வழங்கப்படவுள்ளது. இந்தியாவுக்கான பிரான்ஸ் தூதர் இந்த விருதை அவருக்கு வழங்க இருக்கிறார்.

இந்த நிலையில், தோட்டா தரணிக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில்,

பிரபல கலை இயக்குனர் தோட்டா தரணி அவர்களுக்கு பிரான்ஸ் நாட்டின் உயரிய விருதான "செவாலியே" அறிவிக்கப்பட்டுள்ளதற்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். கலை இயக்கத்தில் பல்வேறு மெச்சத்தக்க சாதனைகள் புரிந்த அவர்தம் மணிமகுடத்தில் இவ்விருது மற்றுமோர் நன்முத்தாய் ஜொலிக்கட்டும்! என்று தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com