வாழ்க்கை முழுவதும் கால்களையே பார்த்தால் சூரியன் எப்படி தெரியும்? - எடப்பாடி மீது மு.க.ஸ்டாலின் கடும் தாக்கு


வாழ்க்கை முழுவதும் கால்களையே பார்த்தால் சூரியன் எப்படி தெரியும்? - எடப்பாடி மீது மு.க.ஸ்டாலின் கடும் தாக்கு
x

வீழ்வது நாமாக இருந்தாலும் வாழ்வது தமிழாக இருக்கட்டும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை,

இந்தி மொழியை எதிர்த்து உயிர் தியாகம் செய்த மொழிப்போர் தியாகிகளின் நினைவை போற்றும் வகையில் தி.மு.க. சார்பில் ஆண்டுதோறும் ஜனவரி மாதம் 25-ந் தேதி வீர வணக்கநாள் கடைபிடிக்கப்பட்டு தமிழ்நாடு முழுவதும் பொதுக்கூட்டங்கள் நடைபெறுவது வழக்கம்.

அந்த வகையில் காஞ்சீபுரம் பச்சையப்பன் ஆண்கள் கல்லூரி வளாக விளையாட்டு மைதானத்தில் வீர வணக்க நாள் பொதுக்கூட்டம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்றது. கூட்டத்தில் தி.மு.க. தலைவரும், தமிழ்நாடு முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு மொழிப்போர் தியாகிகளின் படங்களுக்கு மலர்தூவி மரியாதை செய்தார்.

அதன்பின்னர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

சேனை ஒன்று தேவை... செந்தமிழை காப்பதற்கு பெரும் சேனை ஒன்று தேவை" என்று தமிழை காக்க முழக்கம் கேட்டதும், "ஓடி வந்த இந்திப் பெண்ணே கேள்! நீ தேடி வந்த கோழையுள்ள நாடு இதுவல்லவே!" என்று வீதிகளில் இறங்கி போராடி, தன்னுடைய உயிரையும் தந்து தாய் தமிழைக் காத்து நாம் எல்லோரும் இன்னும் தமிழராய் தன்மான உணர்வோடு தலைநிமிர்ந்த நடைபோட காரணமான மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம்.

திராவிட இயக்க தீரர்களே... நீங்கள் உருவாக்கி கொடுத்த மண்ணில்தான் நாங்கள் வாழ்கிறோம். மொழிப்போர் வீரர்களே, உங்கள் மூச்சு காற்று தான் இப்போதும் எங்களை இயக்கிக்கொண்டிருக்கிறது. தமிழ்த்தாயின் தியாக பிள்ளைகளே, தமிழ்ப் பிள்ளைகளே உங்களை வணங்குகிறேன். மொழிப்போர் தியாகிகளின் பெயரை சொன்னாலே உணர்ச்சி பொங்குகிறது. மொழிப்போர் தியாகிகளின் மூச்சுக் காற்றுதான் எங்களை இயக்கி கொண்டிருக்கிறது. வீழ்வது நாமாக இருந்தாலும் வாழ்வது தமிழாக இருக்கட்டும்.

வரலாற்றில் எத்தனையோ தலைவர்கள் உண்டு. ஆனால் அண்ணாவை பார்த்தால் மட்டும் எனக்கே சில நேரம் பொறாமை உண்டு. ஏனென்றால் பெரியாரை போல குருவும், கலைஞரை போன்ற சிஷ்யனும் கிடைத்த ஒரே தலைவர் அண்ணாதான் எல்லா தாயும் தன்னுடைய பிள்ளைக்கு பெயர் வைப்பாங்க. ஆனால் நம் தாய் நாட்டிற்கு தமிழ்நாடு என பெயர் வைத்தவர் பேரறிஞர் அண்ணாதான். எனது அரசியல் பயணத்திற்கு உந்து சக்தி காஞ்சி மண்தான். 1972-ல் எனது கையில் அண்ணா சுடரை ஏந்தி ஓடிய ஓட்டம் இன்னும் நிற்கவில்லை.

எப்படியாவது இந்தியை நம் மேல் திணிக்க வேண்டும் என ஒரு கும்பல் துடியாக துடிக்கிறது. நேரடியாக திணிக்க முடியாமல் மும்மொழிக் கொள்கை மூலம் இந்தியை திணிக்க முயல்கின்றனர். தமிழ்நாட்டில் இந்தியை திணிப்பதை, தடுப்பதினால் 3458 கோடி நிதியை தராமல் இருக்கின்றனர். பணத்தையும், அதிகாரத்தையும் காட்டி மிரட்டினால் பணிந்துபோக நாம் என்ன அடிமைகளா?. அண்ணா, கலைஞர் போன்ற தமிழ் போராளிகள் பரம்பரையில் வந்தவர்கள் நாம்.

டபுள் இஞ்சின் என்று சொல்லி வட மாநில மக்களை ஏமாற்றி, அவர்களின் வாழ்வாதாரத்தை அழிக்கிற உங்கள் டப்பா இஞ்சின் தமிழ்நாட்டில் ஓடவே ஓடாது. 2021-ல் பெற்ற தோல்வியில் இருந்து எந்த பாடமும் கற்காமல் மறுபடியும் கொத்தடிமை கூட்டமான அதிமுகவின் தோளில் அமர்ந்து பாஜக வருகிறது. கொள்கையால் இணைந்துள்ள திமுக கூட்டணியை FAILURE கும்பல் வீழ்த்தப் போகிறதாம். தமிழ்நாட்டில் என்.டி.ஏ. ஆட்சி அமையும் என்று பிரதமரால் எப்படி சிரிக்காமல் சொல்ல முடிகிறது?.

தேர்தல் சீசன் வந்து விட்டால் போதும்; இனி அடிக்கடி பிரதமர் மோடியை தமிழ்நாட்டில் எதிர்பார்க்கலாம் இந்தமுறை வந்தபோது, வழக்கம்போல பழைய வடையைத்தான் சுட்டுட்டு போயிருக்கிறார்; அந்த மாவும் புளிச்சு போச்சு, அதைக் கேட்டு கேட்டு தமிழ்நாட்டு மக்களின் காதும் புளிச்சு போச்சு.

பிரதமர் மோடியுடன் இருப்பவர் சாதா பழனிசாமி அல்ல; தி கிரேட் பத்து தோல்வி பழனிசாமி. எடப்பாடி பழனிசாமி சொல்கிறார், ‘பிரதமர் தமிழகம் வந்ததும் சூரியன் மறைந்து விட்டதாக’... வாழ்க்கை முழுவதும் கால்களையே பார்த்தல் சூரியன் தெரியாது; நிமிர்ந்து பார்த்தால் தான் சூரியன் தெரியும் பழனிசாமி அவர்களே... ஒருமுறையாவது நிமிர்ந்து பாருங்கள் அப்போதுதான் சூரியன் தெரியும், அதனின் வெப்பமும் தெரியும். தமிழ்நாட்டு மக்கள் தேசிய ஜனநாயக கூட்டணியை ஏற்க மாட்டார்கள்.

பாஜக அரசின் வஞ்சகத்தை தட்டிக்கேட்கும் தைரியம் திமுகவுக்கு மட்டுமே உள்ளது. தமிழ் பண்பாட்டை அழிக்க நினைக்கும் சக்திகளை எதிர்த்து வெற்றி பெறுவோம். டெல்லியின் ஆதிக்கத்துக்கு தமிழ்நாடு தலைவணங்காது; தீ பரவட்டும். இவ்வாறு அவர் கூறினார்.

1 More update

Next Story