கல்லூரிக்கு செல்லாமல் இருந்ததை கண்டித்த தந்தை - மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை

கல்லூரிக்கு செல்லாமல் இருந்ததை தந்தை கண்டித்ததால் மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே காட்டுநாவல் கிராமம் பெரியார் நகரை சேர்ந்தவர் பால்ராஜ், இவரது மகன் மணிகண்டன் (19 வயது). இவர் தஞ்சாவூரில் உள்ள கல்லூரி ஒன்றில் இளங்கலை பட்டப்படிப்பு படித்து வந்தார். இந்த நிலையில் மணிகண்டன் சரிவர படிக்காமலும், கல்லூரிக்கு செல்லாமலும் இருப்பதாக அவரது தந்தைக்கு தெரியவந்தது.
இதுகுறித்து பால்ராஜ் தனது மகனிடம் கேட்டுள்ளார். மேலும் கல்லூரிக்கு ஒழுங்காக சென்று படி என கண்டித்துள்ளார். இதில் மனமுடைந்த மணிகண்டன் தனது வீட்டின் அருகில் உள்ள மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றார்.
இதைப்பார்த்த அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக கந்தர்வகோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் மணிகண்டன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த கந்தர்வகோட்டை போலீசார் விரைந்து வந்து மணிகண்டனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






