

தேனி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள தம்மணம்பட்டியை சேர்ந்தவர் குமார். அவருடைய மனைவி சங்கீதா. இவர்களுக்கு 2 மகன்களும், பூவிகா (17 வயது) என்ற மகளும் உண்டு. இதில் பூவிகா கூடலூரில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார்.
கடந்த 21-ந்தேதி பூவிகாவுக்கு பிறந்தநாள். அதற்கு பெற்றோர் புத்தாடை மற்றும் கேக் வாங்கி கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் பூவிகா, தனது தாய்-தந்தையிடம் புத்தாடை, கேக் வாங்கி தராதது குறித்து கேட்டு சண்டை போட்டார்.
இந்த நிலையில் சம்பவத்தன்று காலை பூவிகா திடீரென வாந்தி எடுத்தார். இதுகுறித்து பெற்றோர் கேட்டபோது பிறந்தநாளுக்கு ஏதும் செய்யாததால் நான் விஷத்தை குடித்துவிட்டேன் என்று கூறியுள்ளார். இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர், பூவிகாவை மீட்டு சிகிச்சைக்காக கம்பம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கிருந்து அவர் மேல்சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சைக்கு பலனின்றி பூவிகா பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து கூடலூர் தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.