கணவர் திட்டியதால் விரக்தி: விஷம் குடித்து இளம்பெண் தற்கொலை

கோப்புப்படம்
கணவர் திட்டியதால் விரக்தியடைந்த இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
திருவண்ணாமலை அருகில் உள்ள அண்டம்பள்ளம் மேற்கு கொட்டாய் பகுதியைச் சேர்ந்தவர் பாலாஜி. அவரது மனைவி கீர்த்தனா (22 வயது). சம்பவத்தன்று அவர்களது குழந்தைக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது. பாலாஜி குழந்தைக்கு ஏன் சரிவர மருந்து கொடுக்கவில்லை? எனக் கேட்டு மனைவியை திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் விரக்தி அடைந்த கீர்த்தனா பூச்சிக்கொல்லி மருந்தை (விஷம்) குடித்துவிட்டு வீட்டில் மயக்கமடைந்து கிடந்தார்.
அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு முதலுதவி அளித்து வீட்டிற்கு அழைத்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் மீண்டும் உடல்நலம் பாதிக்கப்பட்ட கீர்த்தனாவை மீட்டு கிருஷ்ணகிரியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கீர்த்தனா பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்த புகாரின் பேரில் வெறையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தற்கொலை செய்து கொண்ட கீர்த்தனாவுக்கு திருமணமாகி 5 ஆண்டுகளே ஆவதால் திருவண்ணாமலை வருவாய் கோட்டாட்சியர் மேல் விசாரணை நடத்தி வருகிறார்.






