தேவகோட்டை அருகே 13-ம் நூற்றாண்டை சேர்ந்த கல்வெட்டுகள் கண்டெடுப்பு


தேவகோட்டை அருகே 13-ம் நூற்றாண்டை சேர்ந்த கல்வெட்டுகள் கண்டெடுப்பு
x

கோவிலில் கண்டெடுக்கப்பட்ட ஒரு கல்வெட்டு 36 வரிகளையும், மற்றொரு கல்வெட்டு 39 வரிகளையும் கொண்டுள்ளது.

சிவகங்கை

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே கோட்டூர் நயினார்வயல் கிராமத்தில் அகத்தீசுவரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் உள்ள சவுந்திரநாயகி அம்மன் சன்னதி அர்த்த மண்டபம் உள்பகுதியில் இடது, வலப்புற சுவரில் 13-ம் நூற்றாண்டை சேர்ந்த 2 கல்வெட்டுக்கள் இருப்பதாக ஆறாவயல் கிராமத்தை சேர்ந்த பெரியய்யா என்பவர் கொடுத்த தகவலின் பேரில் காரைக்குடி அழகப்பா அரசு கலைக்கல்லூரியின் வரலாற்றுத்துறை இணை பேராசிரியர் வேலாயுதராஜா, புதுக்கோட்டை தொல்லியல் கழக தலைவர் ராஜேந்திரன் ஆகியோர் களஆய்வு செய்தனர்.

இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:- இந்த கோவிலில் கண்டெடுக்கப்பட்ட ஒரு கல்வெட்டு 36 வரிகளையும், மற்றொரு கல்வெட்டு 39 வரிகளையும் கொண்டுள்ளது. இவை பாண்டிய நாட்டை ஆண்ட முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியனின் 14-வது ஆட்சியாண்டான கி.பி. 1229-ம் ஆண்டை சேர்ந்ததாகும். முதல் மாறவர்மன் சுந்தரபாண்டியன் மதுரையை தலைநகராக கொண்டு பாண்டியநாட்டை கி.பி. 1216 முதல் 1238 வரை ஆட்சி செய்தார். இவர் சோழர்களை போரில் தோற்கடித்ததால் சோணாடு கொண்டருளிய சுந்தரபாண்டிய தேவர் என இவரது கல்வெட்டுகளின் மூலம் அறியப்படுகிறார்.

ஒரு கல்வெட்டில் இவ்வூர் பாலூர் என குறிப்பிடப்பட்டுள்ளதோடு திருவனந்தி சுவரமுடையாருக்கும், அஞ்சாத பெருமாள் சந்ததிக்கும் அதாவது பூசைக்கும், திருப்படி மாற்றும் செலவினத்துக்கும் வரி நீக்கி 2 மா நிலம் வழங்கப்பட்டு அதன் நான்கெல்லைகளிலும் திரிசூலக்கல் நட்டு வைத்து இவ்வாண்டு முதல் சந்திரசூரியன் உள்ள வரை இந்த தர்மம் நிலைத்திருக்கும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இக்கல்வெட்டு மாளவச் சக்கரவர்த்தி ஓலை என்று தொடங்குகிறது. இதுபோல அரண்மனைச் சிறுவயல் கோவிலில் காணப்படும் கல்வெட்டிலும் மாளவச்சக்கரவர்த்தி ஓலை என்ற வரி காணப்படுகிறது.

மேலும் முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியனின் கல்வெட்டுகள் திருப்பத்தூர், சதுர்வேதமங்கலம், பெரிச்சிகோவில், அரண்மனை சிறுவயல், திருமலை, கம்பனூர், வெளியாத்தூர் போன்ற பகுதிகளில் காணப்படுகின்றன. இதில் காணப்படும் செய்தி போலவே வெளியாத்தூர் கோவிலில் காணப்படும் முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியனின் கல்வெட்டிலும், மழவராயர் நமக்குச் சொன்னமையினால் என்று வரிகள் வருவது குறிப்பிடத்தக்கது என்று கூறினர்.

1 More update

Next Story