சாலைகளில் குழந்தைகளை வைத்து பிச்சை எடுக்கும் பெண்கள் குறித்து விசாரணை - ஐகோர்ட்டு உத்தரவு

கோப்புப்படம்
சாலைகளில் குழந்தைகளை வைத்து பிச்சை எடுக்கும் பெண்கள் குறித்து விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
சென்னை ஐகோர்ட்டில், வக்கீல் ஆர்.எஸ்.தமிழ்வேந்தன் என்பவர் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில், "சென்னையில் உள்ள பல சாலைகளிலும், போக்குவரத்து சிக்னல்களிலும் குழந்தைகளை வைத்து பெண்கள் பலர் பிச்சை எடுக்கின்றனர். அந்த பெண்களிடம் உள்ள குழந்தைகள் எந்த நேரமும் தூங்கிக் கொண்டே இருப்பது பல சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. அதுமட்டுமல்ல அந்த குழந்தைகளுக்கு உண்மையில் அந்த பெண்கள் தாய்தானா? என்பதிலும் சந்தேகம் உள்ளது. ஏன் என்றால், பிச்சை எடுக்கும் பெண்களுக்கும், அந்த குழந்தைகளுக்கும் எந்த உருவ ஒற்றுமையும் இல்லை.
வெயில் அதிகம் இருந்தாலும், வாகன போக்குவரத்து சத்தங்கள் அதிகம் இருந்தாலும் அந்த குழந்தைகள் கண் விழிக்காமல், கண் மூடியபடி உள்ளன. இதற்காக அந்த குழந்தைகளுக்கு தூக்க மாத்திரை, ஏதாவது மருந்துகள் அல்லது மதுபானங்கள் கொடுக்கப்படுகிறதா? என்பதை கண்டறிய வேண்டியது அவசியமாகிறது. குழந்தைகளை காட்டி பிச்சை எடுக்கும் அந்த பெண்கள் பெரும்பாலும் தமிழ் பேசுவது இல்லை.
அதனால், இந்த குழந்தைகளை வேறு இடங்களில் இருந்து கடத்தி வந்து பிச்சை எடுக்க பயன்படுத்தப்படுகிறதா? இந்த கொடூரமான செயல்களுக்கு பின்னணியில் இருக்கும் நபர்கள் யார்? என்பது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் தொடர்பாக விசாரணை நடத்துவது அவசியமாகிறது.
இதுகுறித்து கடந்த ஆகஸ்ட் 8-ந்தேதி தமிழ்நாடு பொது சுகாதாரத்துறை செயலாளர், சென்னை பெருநகர மாநகராட்சி கமிஷனர், சென்னை போலீஸ் கமிஷனர், போக்குவரத்து இணை போலீஸ் கமிஷனர் ஆகியோருக்கு புகார் மனு அனுப்பினேன். இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை'' என்று கூறியிருந்தார்.
இந்த மனு தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவத்சவா, நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வக்கீல் எம்.செந்தில்குமார், “பிச்சை எடுக்கும் குழந்தைகள் குறித்து விசாரணை நடத்தி, ஒருவேளை கடத்தப்பட்ட குழந்தையாக இருந்தால், அந்த குழந்தைகளை மீட்க வேண்டும். கடத்தி வந்து பிச்சை எடுக்கும் பெண்களை கைது செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும'' என்று வாதிட்டார்.
இதையடுத்து நீதிபதிகள், மனுதாரர் கொடுத்துள்ள கோரிக்கை மனு குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி, விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும். விசாரணையை 11-ந்தேதிக்கு தள்ளிவைக்கிறோம்" என்று உத்தரவிட்டனர்.






