சிலிகுரி பகுதியை வலுப்படுத்த வேண்டிய நேரமிது! - வங்கதேசத்தின் கூச்சலுக்கு சத்குரு பதிலடி


சிலிகுரி பகுதியை வலுப்படுத்த வேண்டிய நேரமிது! - வங்கதேசத்தின் கூச்சலுக்கு சத்குரு பதிலடி
x

சிலிகுரி பகுதியை துண்டிப்போம் என்று வங்கதேசத்தின் தற்காலிக அரசு கூறி வருகிறது.

கோவை,

இந்தியாவின் புவியியல் அமைப்பில் 'சிக்கன் நெக்' என்று அழைக்கப்படும் சிலிகுரி பகுதியை துண்டிப்போம் என்று வங்கதேசத்தின் தற்காலிக அரசு கூறி வருவது குறித்த கேள்விக்கு, “நாம் சிலிகுரி பகுதிக்கு என்ன தேவையோ அதை செய்து வலுப்படுத்த வேண்டிய நேரம் இது" என்று ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு கூறியுள்ளார்.

சமீபத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில், வங்கதேசத்தின் தற்போதைய சூழல் மற்றும் இந்தியாவின் சிலிகுரி காரிடார் பகுதிக்கு விடுக்கப்படும் அச்சுறுத்தல்கள் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு சத்குரு அவர்கள் விரிவான விளக்கம் அளித்தார். இது தொடர்பான சத்குருவின் எக்ஸ் தளப் பதிவில், “பாரதப் பிரிவினையினால் உருவான 78 ஆண்டுகால முரண்பாடுதான் இந்த சிலிகுரி காரிடார். இது 1971-ஆம் ஆண்டிலேயே சரிசெய்யப்பட்டிருக்க வேண்டும். இப்போது தேசத்தின் இறையாண்மைக்கே பகிரங்க அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ள நிலையில், இந்தக் கோழிக்கு ஊட்டமளித்து, அது ஒரு யானையாக உருவெடுப்பதற்கு அனுமதிக்க வேண்டிய நேரம் இது." எனக் கூறியுள்ளார். இது தொடர்பான காணொளி சத்குருவின் எக்ஸ் தளப் பக்கத்தில் வெளியிடப்பட்டு உள்ளது. அதில் மேலும் அவர் கூறியுள்ளதாவது;

"இந்தியாவின் ஒரு பகுதி வெறும் 22 கிலோமீட்டர் அகலத்தில் இருப்பது ஒரு தேசத்தை உருவாக்குவதற்கான சரியான முறையல்ல. இதற்கான அதிகாரம் நம்மிடம் 1946 மற்றும் 1947-இல் இல்லாமல் இருந்திருக்கலாம், ஆனால் 1972-ல் இதற்கான திருத்தங்களை செய்யும் அதிகாரம் இருந்தும் நாம் அதை செய்யவில்லை. கோழியாக இருப்பதன் மூலம் தேசங்களை உருவாக்கிவிட முடியாது. அது ஒரு யானையாக வளர வேண்டும். அதற்கு ஊட்டம் தேவைப்படலாம், அல்லது சில ஊக்க மருந்துகள் தேவைப்படலாம், எது தேவையோ அதை நாம் செய்தே தீர வேண்டும். எப்படியோ, இப்போது அவர்கள் இந்த விவகாரத்தை முன்னிலைக்கு கொண்டு வந்துவிட்டார்கள், இனி இது தவிர்க்க முடியாமல் நடந்தே தீரும். உலகில் நாடுகள் இல்லாமலும், எல்லைகள் இல்லாமலும் இருந்தால் அது அற்புதமாக இருந்திருக்கும். இந்த அழகான கோள், ஒரு பிறந்தநாள் கேக்கைப் போல துண்டு துண்டாக வெட்டப்பட்டு, 'இது என் துண்டு, அது உன் துண்டு' என்று சொல்லப்படுவது முட்டாள்தனமானது. ஆனால் நாம் இன்னும் அந்த அளவிலான வாழ்வியலில்தான் இருக்கிறோம். திடீரென்று நாளை நாம் அனைவரையும் தழுவிக்கொண்டு அற்புதமாக வாழ்வோம் என்று கற்பனை செய்ய முடியாது. அது இப்போதைக்கு ஒரு முட்டாள்தனமான சிந்தனை. ஆனால் அது ஒரு லட்சியமாக இருக்க வேண்டும். ஒரு நாள் நாம் அப்படி மாறவும் வேண்டும்.

ஆனால் தற்போதைய நிலையில், தேசங்களின் இறையாண்மையைப் பாதுகாப்பது மிக முக்கியமானது. அதே சமயம், அண்டை நாடுகளும் செழிப்படைய நாம் உதவ வேண்டும். அதன் மூலம் காலப்போக்கில் எல்லைகள் மெதுவாகத் தளர்ந்து, ஒரு கட்டத்தில் முழுமையாக அது நீக்கப்படலாம். இது இப்போது சாத்தியமற்றதாகத் தோன்றலாம், ஆனால் 1944, 45-ல் ஐரோப்பாவிலும் அப்படித்தான் தோன்றியது. மக்கள் கடுமையாகப் போரிட்டார்கள், மிக மோசமான முறையில் இரண்டாம் உலகப் போர் நடந்தது. ஆனால் இன்று பாருங்கள், அவர்கள் அனைவரும் ஐரோப்பிய ஒன்றியமாக இருக்கிறார்கள். எனவே அதைச் செய்வது சாத்தியம்தான்.

எப்படியிருந்தாலும், இந்த முரண்பாடு வெறும் 78 ஆண்டுகளுக்கு முன்புதான் நிகழ்ந்தது. சில திருத்தங்கள் தேவைப்படுகின்றன. திருத்தம் நடந்தே தீர வேண்டும். நாம் அந்த சிக்கனுக்கு நன்றாக உணவளித்து அதை ஒரு யானையாக மாற்ற வேண்டும் என்று நான் நினைக்கிறேன். யானையின் கழுத்தை கையாள்வது அவ்வளவு எளிதாக இருக்காது." என அவர் கூறியுள்ளார்.

1 More update

Next Story