கோவளம் கடற்கரை: 5-வது முறையாக நீலக்கொடி சான்றிதழ்


கோவளம் கடற்கரை: 5-வது முறையாக நீலக்கொடி சான்றிதழ்
x

2024-25 ஆம் ஆண்டில், கோவளம் கடற்கரைக்கு 5.5 லட்சத்திற்கும் அதிகமான பார்வையாளர்கள் வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

சென்னைக்கு அருகிலுள்ள பிரபலமான சுற்றுலா தலங்களில் ஒன்றான புகழ்பெற்ற கோவளம் கடற்கரை, 2025-26 ஆம் ஆண்டில் தொடர்ந்து ஐந்தாவது ஆண்டாக நீலக் கொடி சான்றிதழைப் பெற்றுள்ளது.

சுற்றுச்சூழல் கல்விக்கான அறக்கட்டளை (Foundation for Environmental Education - FEE), டென்மார்க் நிர்ணயித்த உலகத் தரங்களை கோவளம் கடற்கரை மீண்டும் பூர்த்தி செய்துள்ளதாக ப்ளூ பிளாக் இந்தியா, தேசிய அமைப்பாளர், செங்கல்பட்டு மாவட்ட கலெக்டருக்கு தெரிவித்துள்ளார்.

ப்ளூ பிளாக் என்பது ஒரு சர்வதேச அங்கீகாரம் பெற்ற சுற்றுச்சூழல் குறியீடு. இது கடற்கரைகளின் நீர் தரம், சுற்றுச்சூழல் கல்வி, பாதுகாப்பு, தூய்மை, கழிவு மேலாண்மை மற்றும் நிலையான உள்கட்டமைப்பு போன்ற 33 கடுமையான நிபந்தனைகளை பூர்த்தி செய்யும் கடற்கரைகளுக்கு வழங்கப்படுகிறது. இந்த சான்றிதழ் ஆண்டுதோறும் தேசிய மற்றும் சர்வதேச குழுக்களின் ஆய்வுகளுக்குப் பிறகு புதுப்பிக்கப்படுகிறது.

கோவளம் கடற்கரை, செப்டம்பர் 21, 2021 அன்று சான்றிதழ் பெற்றபோது, தமிழ்நாட்டின் முதல் ப்ளூ பிளாக் கடற்கரையாக ஆனது. இந்த ஆண்டு நடைபெற்ற விரிவான மதிப்பீட்டின் அடிப்படையில், 2025-26 ஆம் ஆண்டிற்கான இந்த கௌரவத்தை கடற்கரை தக்கவைத்துள்ளது.

கடற்கரையில் பார்வையாளர்களின் வசதிக்காக மூங்கில் நிழற்குடைகள், ஓய்வெடுக்கும் நாற்காலிகள், உடை மாற்றும் அறைகள், கழிப்பறைகள் மற்றும் மிதக்கும் சக்கர நாற்காலிகள் போன்ற வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன.

காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை, பயிற்சி பெற்ற உயிர்காப்பாளர்கள் மற்றும் கண்காணிப்பு அமைப்புகள் மூலம் பார்வையாளர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படுகிறது. 2024-25 ஆம் ஆண்டில், இந்த கடற்கரைக்கு 5.5 லட்சத்திற்கும் அதிகமான பார்வையாளர்கள் வந்துள்ளனர்.

மேலும், தமிழ்நாட்டின் பல கடற்கரைகளுக்கும் விரைவாக சான்றிதழ் பெற தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.

ப்ளூ பிளாக் சான்றிதழ் என்பது ஒரு கடற்கரை எவ்வளவு தூய்மையாகவும், பாதுகாப்பாகவும், சுற்றுச்சூழலுக்கு உகந்ததாகவும் இருக்கிறது என்பதைக் காட்டும் ஒரு சிறப்பு அடையாளம் ஆகும்.

இது குறித்து சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர் சுப்ரியா சாஹு கூறுகையில், உலகளாவிய சான்றிதழைப் பெறுவதற்காக தமிழ்நாட்டில் 10 கடற்கரைகளைத் தேர்ந்தெடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

இவற்றில் சென்னையில் நான்கு கடற்கரைகள், கடலூரில் இரண்டு கடற்கரைகள் மற்றும் விழுப்புரம், நாகப்பட்டினம், ராமநாதபுரம் மற்றும் தூத்துக்குடியில் தலா ஒரு கடற்கரை ஆகியவை அடங்கும். கோவளம் கடற்கரை தொடர்ந்து 5-வது முறையாக நீலக்கொடி சான்றிதழ் பெற்றதற்கு தமிழக அரசின் அர்ப்பணிப்பு மற்றும் உள்ளூர் சமூகத்துடனான ஒத்துழைப்புக்கு நன்றி என்று சுப்ரியா சாஹு கூறியுள்ளார்.

1 More update

Next Story