‘உண்மையான கூட்டாட்சியை வலுப்படுத்துவோம்’ - அனைத்து மாநில முதல்-மந்திரிகளுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்


‘உண்மையான கூட்டாட்சியை வலுப்படுத்துவோம்’ - அனைத்து மாநில முதல்-மந்திரிகளுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்
x

கூட்டாட்சி அடித்தளங்களை வலுப்படுத்துவதில் மாநில முதல்-மந்திரிகளின் பங்கு முக்கியமானது என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை,

இந்தியாவின் கூட்டாட்சி அடித்தளங்களை வலுப்படுத்துவதிலும், அனைத்து மாநிலங்களின் ஒட்டுமொத்த விருப்பத்தைப் பிரதிபலிக்கும் வகையில் இதற்கான ஒரு ஆவணத்தை வடிவமைப்பதிலும் மாநில முதல்-மந்திரிகளும், கட்சித் தலைவர்களும் தீவிரமாக பங்கேற்க வேண்டும் என்றும், தமிழ்நாடு அரசால் அமைக்கப்பட்ட மத்திய-மாநில உயர்நிலைக் குழுவின் இணையதளத்தில் உள்ள இணையவழி வினாத்தாள் படிவத்தினை ஆராய்ந்து, விரிவான பதில்களை அனுப்பி வைக்குமாறும் கேட்டு, மற்ற மாநில முதல்-மந்திரிகளுக்கும், பல்வேறு கட்சித் தலைவர்களுக்கும் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது;-

“1935-ம் ஆண்டு இந்திய அரசுச் சட்டத்திலிருந்து குறிப்பிடத்தக்க வகையில் வடிவமைக்கப்பட்ட இந்திய அரசமைப்பானது, ஒன்றியத்திற்கும், மாநிலங்களுக்கும் இடையில் சிறந்ததொரு அதிகார சமநிலையுடன் கூடிய கூட்டாட்சி கட்டமைப்பினை உருவாக்கியது. இருப்பினும், பல ஆண்டுகளாக இந்த சமநிலை தொடர்ந்து மாற்றப்பட்டு வருகிறது. வலுவான ஒன்றியமும், வலுவான மாநிலங்களும் முரண்பட்டிருக்காமல், ஒன்றையொன்று சார்ந்து, ஒவ்வொன்றும் மற்றவற்றின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்க வேண்டும்.

1967-ம் ஆண்டில், அன்புக்குரிய தலைவரும், அப்போதைய தமிழ்நாட்டின் முதல்-அமைச்சருமான சி.என்.அண்ணாதுரை, “இந்தியாவின் இறையாண்மையையும், ஒருமைப்பாட்டையும் பாதுகாக்கும் அளவுக்கு ஒன்றியம் வலுவாக இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். இந்த நாட்டின் பாதுகாப்பிற்கு ஒன்றியத்தைப் பொறுப்பேற்கச் செய்யத் தேவையான அனைத்து அதிகாரங்களும் ஒன்றியத்திடம் இருக்க வேண்டும்.

ஆனால், பாகிஸ்தானியர்களிடமிருந்தோ அல்லது சீனர்களிடமிருந்தோ இந்தியாவைப் பாதுகாக்க, மத்திய அரசு இங்கு ஒரு சுகாதாரத் துறையை வைத்திருக்க வேண்டும் என்று அர்த்தமல்ல. அது எந்த வகையில் இந்தியாவின் இறையாண்மையை வலுப்படுத்துகிறது? மத்திய அரசிடம் கல்வித் துறை இருக்க வேண்டுமா? அங்குள்ள ராணுவ வீரர்களின் போர்த் திறனை அது எந்த வகையில் மேம்படுத்துகிறது?” என்றும் வினவியுள்ளார்.

அதேபோன்று, கலைஞர் மு. கருணாநிதி, "மாநிலங்களுக்கு சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி" என்ற கொள்கையைத் தொடர்ந்து ஆதரித்தார். 1969-ம் ஆண்டு அவர் முதல்-அமைச்சராக இருந்தபோது, மத்திய-மாநில உறவுகள் குறித்து ஆராய்ந்து அறிக்கை அளித்திட நீதிபதி பி.வி. ராஜமன்னார் தலைமையில் முதல் குழுவை அமைத்தார்.

1971-ஆம் ஆண்டு இந்தக் குழு அளித்த அறிக்கை, இந்தியாவில் கூட்டாட்சி குறித்த விவாதங்களை வடிவமைப்பதில் ஒரு மைல்கல்லாக அமைந்தது. 1974-ஆம் ஆண்டு, தமிழ்நாடு சட்டமன்றம், ராஜமன்னார் குழுவின் பரிந்துரைகளை ஏற்றுக்கொண்டு, உண்மையான கூட்டாட்சி அமைப்புக்கு வழிவகுக்கும் வகையில் அரசமைப்பைத் திருத்துமாறு மத்திய அரசை வலியுறுத்தி ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்மானத்தை நிறைவேற்றியது.

பின்னர், மத்திய அரசு சர்க்காரியா கமிஷன் (1983 – 1988) மற்றும் புஞ்சி கமிஷன் (2007 – 2010) ஆகியவற்றை அமைத்தது. இவை இரண்டும் அதிகாரப் பகிர்வு குறித்து விரிவான முறையில் ஆராய்ந்தன என்றாலும், அவற்றின் பரிந்துரைகள் உண்மையான, சமநிலையான கூட்டாட்சிக் கட்டமைப்பை ஏற்படுத்துவதற்கு உதவிடவில்லை.

இதற்கிடையில், தொடர்ச்சியான அரசியலமைப்பு திருத்தங்கள், யூனியன் சட்டங்கள் மற்றும் ஒன்றியத்தின் கொள்கைகள், அதிகார சமநிலையை மத்திய அரசுக்குச் சாதகமாக படிப்படியாக சாய்த்துள்ளன. மத்திய அரசில் உள்ள பெரிய அமைச்சகங்கள் மாநிலங்களின் செயல்பாடுகளில் தலையிட்டு, நிதிக் குழு அளிக்கும் மானியங்களுக்கான நிபந்தனைகள், மத்திய நிதியுதவி திட்டங்களுக்கான ஒரே மாதிரியான வழிகாட்டுதல்கள், பணி வாரியாக கட்டாய ஒப்புதல்கள் மற்றும் திட்டங்களைச் செயல்படுத்தும்போது அவற்றின் ஒவ்வொரு கட்டத்திலும் தொடர் கண்காணிப்பு போன்றவற்றின் மூலம் மாநில முன்னுரிமைகளுக்கு பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன அல்லது ஆணைகளை வெளியிடுகின்றன.

இன்றைக்கு நாம் மத்திய-மாநில அதிகாரங்களில் உள்ள இந்த முன்னேற்றங்களை தீர்க்கமாக மறுபரிசீலனை செய்து, உண்மையான கூட்டாட்சியை வலுப்படுத்தும் எதிர்கால கட்டமைப்பை உருவாக்குவதே காலத்தின் தேவை. இந்த நோக்கத்தின் அடிப்படையில், மத்திய-மாநில உறவுகள் குறித்து ஆராய்ந்து அறிக்கை அளித்திட, ஓய்வு பெற்ற சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி குரியன் ஜோசப்பை தலைவராகக் கொண்டும், ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி கே.அசோக் வரதன் ஷெட்டி மற்றும் முன்னாள் திட்டக் குழுத் துணைத் தலைவர் பேராசிரியர் மு. நாகநாதன் ஆகியோர்களை உறுப்பினர்களாகக் கொண்டும், உயர்நிலைக் குழு ஒன்றினை தமிழ்நாடு அரசு அமைத்துள்ளது.

இக்குழுவின் பணி செம்மையுற அமையும் வகையில், அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் பரிசீலிக்கப்பட்ட கருத்துக்களைப் பெறுவதற்கு ஏதுவாக, ஒரு கேள்வித்தாளை இக்குழு தயாரித்துள்ளது. கடந்த 23-8-2025 அன்று, மத்திய-மாநில உறவுகள் குறித்த தேசிய கருத்தரங்கில், உயர்நிலைக் குழுவின் இணையதளத்தினை தொடங்கி வைத்து, இணையவழி வினாத்தாள் படிவத்தினை வெளியிட்டேன். அதனை https://hlcusr.tn.gov.in என்ற இணையதளத்தில் காணலாம்.

இந்த விஷயத்தில் மாநில முதல்-மந்திரிகளும், பல்வேறு கட்சித் தலைவர்களும் கவனம் செலுத்தி, உயர்நிலைக் குழுவின் வினாத்தாளினை ஆராய்ந்து, விரிவான பதில்களை வழங்கிட வேண்டும். அனைத்து மாநிலங்களின் ஒட்டுமொத்த விருப்பத்தைப் பிரதிபலிக்கும் ஒரு ஆவணத்தை வடிவமைப்பதிலும், நமது நாட்டின் கூட்டாட்சி அடித்தளங்களை வலுப்படுத்துவதிலும் மாநில முதல்-மந்திரிகள் மற்றும் கட்சித் தலைவர்களின் தீவிர பங்கேற்பு மிக முக்கியமானதாக விளங்கும்.

இந்த முயற்சி அரசியல் மற்றும் கட்சி வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டது. நமது அரசியலமைப்பின் கூட்டாட்சி உணர்வைப் புதுப்பித்து, எதிர்கால சந்ததியினருக்கு வலுவான, ஒன்றுபட்ட மற்றும் உண்மையான கூட்டாட்சி கொண்ட ஒரு ஒன்றியத்தை வழங்குவோம்.”

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

1 More update

Next Story