மதுரை: ஜல்லிக்கட்டு போட்டிகளில் கலந்து கொள்ள ஆன்லைன் முன்பதிவு தொடங்கியது

இன்று மாலை 5 மணி முதல் நாளை மாலை 5 மணிக்குள் முன்பதிவு செய்திட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதுரை,
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை மாவட்டத்திற்கு பெருமை சேர்க்கும் ஜல்லிக்கட்டு போட்டிகள் அவனியா புரத்தில் வருகிற 15-ந்தேதியும், பாலமேட்டில் 16-ந்தேதியும், உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூரில் 17-ந்தேதியும் நடைபெற உள்ளது.
இந்தநிலையில் இதற்கான முகூர்த்தக்கால் நடப்பட்டு முன்னேற்பாடு பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையே போட்டிகளில் பங்கேற்கும் மாடுபிடி வீரர்களும், காளைகளுக்கும் உரிய பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் உள்ள காளை உரிமையாளர்கள் மற்றும் மாடுபிடி வீரர்கள் மதுரை மாவட்டத்தில் நடை பெறக்கூடிய உலக புகழ் பெற்ற ஜல்லிக்கட்டு போட்டிகளில் கலந்துகொள்ள வேண்டும் என்பதை ஒரு லட்சியமாகவே கொண்டு களமிறங்குவார்கள்.
இந்நிலையில் மாவட்டத்தில் மதுரை நடைபெறக்கூடிய அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிகளில் கலந்து கொள்ள இருக்கும் மாடுபிடி வீரர்கள் மற்றும் காளைகளுக்கான ஆன்லைன் முன்பதிவு இன்று (7-ந்தேதி) மாலை 5 மணிக்கு தொடங்கியது. போட்டிகளில் கலந்து கொள்ளும். காளை உரிமையாளர்கள் மற்றும் மாடுபிடி வீரர்கள் மதுரை மாவட்ட நிர்வாகத்தின் இணையதள பக்கமான madurai. nic.in என்ற இணையதள முகவரி மூலமாக தங்களது பெயர்களை இன்று மாலை 5 மணி முதல் நாளை (8-ந்தேதி) மாலை 5 மணிக்குள் முன்பதிவு செய்திட வேண்டும் எனவும் மதுரை மாவட்ட கலெக்டர் பிரவீண்குமார் அறிவித்துள்ளார்.
மதுரை மாவட்டத்தில் நடைபெறும் இந்த 3 ஜல்லிக்கட்டு போட்டிகளிலும் கலந்துகொள்ளும் காளைகள் அவனியாபுரம், பாலமேடு மற்றும் அலங்காநல்லூர் ஆகிய மூன்று போட்டிகளில் ஏதவாது ஒரு போட்டியில் மட்டுமே கலந்துகொள்ள அனுமதி அளிக்கப்படும். எனவும், ஜல்லிக்கட்டு போட்டிகளில் கலந்து கொள்ள இருக்கும் காளையுடன் ஒரு உரிமையாளர் மற்றும் காளையுடன் நன்கு பழக்கமுள்ள ஒரு உதவியாளர் மட்டுமே அனுமதிக்கப்படுவர் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்களுக்கான ஆன்லைன் முன்பதிவு செய்தவர்களின் சான்றுகள் முழுவதுமாக சரி பார்க்கப்பட்ட பின்னரே தகுதியான நபர்கள் மட்டுமே டோக்கன் பதிவிறக்கம் செய்ய இயலும். அவ்வாறு டோக்கன் பதிவிறக்கம் செய்த நபர்கள் மட்டுமே ஜல்லிக்கட்டு விளையாட்டில் பங்கேற்க அனுமதிக்கப்படுவார்கள் எனவும் மாவட்ட நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.






