மேகதாது அணை திட்டம் தமிழகத்தை பாதிக்காது: சித்தராமையா பேட்டி

தமிழகத்துக்கு அதிக அளவில் தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளதாக கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா கூறினார்.
பெங்களூரு,
கர்நாடக மாநிலம் மைசூருவில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் முதல்-மந்திரி சித்தராமையா நேற்று அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்தினார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கர்நாடகத்தில் இந்த ஆண்டு அதிக அளவு மழை பெய்துள்ளது. இதனால் தமிழகத்துக்கு அதிக அளவில் தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது. காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுப்படி ஆண்டுக்கு 177.25 டி.எம்.சி. (ஒரு டி.எம்.சி. என்பது 100 கோடி கன அடி) நீர் கர்நாடகத்தில் இருந்து தமிழகத்துக்கு திறக்கப்பட வேண்டும். ஆனால் நடப்பு ஆண்டில் கர்நாடகம் திறக்க வேண்டிய அளவை விட கூடுதலாக 150 டி.எம்.சி. நீர் தமிழகத்துக்கு திறந்து விடப்பட்டுள்ளது. இதன் அர்த்தம் நாங்கள் 2 மடங்கு நீர் திறந்து விட்டுள்ளோம் என்பது தான்.
இதனால் காவிரி நீரை திறந்து விடுவதில் சமநிலைப்படுத்தும் நோக்கில் மேகதாதுவில் புதிதாக அணை கட்ட முடிவு செய்யப்பட்டு உள்ளது. மேகதாது அணை தமிழகத்தை பாதிக்காது. தமிழ்நாடு, மேகதாது அணை திட்டத்தை எதிர்த்து வருகிறது. தமிழகத்தின் நீர் பங்கை மேகதாது அணை பறித்துக் கொள்ளும் என்று தமிழ்நாடு அஞ்சுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.






