மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை காலம் தாழ்த்தாமல் மேற்கொள்ள வேண்டும் - ஜி.கே.வாசன்


மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை காலம் தாழ்த்தாமல் மேற்கொள்ள வேண்டும் - ஜி.கே.வாசன்
x

கோப்புப்படம் 

மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு காலத்தே தொடங்க வேண்டும் என்று ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.

சென்னை

தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

தமிழக அரசு மழைக்காலம் தொடங்கிவிட்டதால் பொது மக்களைப் பாதுகாக்கும் வகையில் திட்டங்களை வகுத்து செயல்படுத்த வேண்டும். கடந்த 4 ஆண்டுகளாக மழைக்காலத்தில் சென்னை மாநகரத்தின் பல இடங்களில் மழைநீர் வடியாமல், தேக்கமடைந்து, சுத்தம் சுகாதாரத்திலும், போக்குவரத்திலும், பொது மக்களின் பயணத்திலும் பெரும் சிரமம் ஏற்பட்டது. இதற்கு காரணம் தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முறையாக, காலத்தே மேற்கொள்ளாதது தான்.

சென்னையில் மட்டுமல்ல தமிழகம் முழுவதும் திருநெல்வேலி, கன்னியாகுமரி, மதுரை, கடலுர் என பல மாவட்டங்களில் மழைக்காலத்தில் பொது மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டார்கள். தமிழக மக்களை மழைக்காலப் பாதிப்பில் இருந்து பாதுகாக்க தவறிய அரசாக தமிழக தி.மு.க அரசு செயல்பட்டது. எனவே இந்த ஆண்டிலாவது மழைக்காலப் பாதுப்பில் இருந்து தமிழக மக்களைப் பாதுகாக்க தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை காலத்தே தொடங்க வேண்டும்.

குறிப்பாக சென்னை மாநகரம் உட்பட தமிழகம் முழுவதும் அனைத்துப் பகுதிகளிலும் மழையால் பாதிக்கப்படாத வகையில் சாலை வசதி, மின்சார இணைப்பு, அரசுப் பேருந்துகளில் மேற்கூரை, மரங்கள், அரசின் கட்டிடங்கள், கல்வி நிறுவனக் கட்டிடங்கள், நேரடி நெல்கொள்முதல் நிலையங்கள் என அனைத்து துறைகள் சார்ந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

மிக முக்கியமாக வடிகால் பணிகள், சுத்தம் சுகாதாரப் பணிகள் தயார் நிலையில் இருக்க வேண்டும். தமிழகம் முழுவதும் மழைக்காலத்தில் ஏற்படும் புயல், வெள்ளம் ஆகியவற்றில் இருந்து மக்கள் தங்களைப் பாதுகாத்துக்கொள்ளவும், விழிப்புணர்வுடன் இருக்க வேண்டியதன் அவசியத்தையும் தெரிவிக்க வேண்டும். தமிழக அரசு கடந்த 4 ஆண்டுகளாக மழைக்காலப் பாதிப்பில் இருந்து சென்னை உட்பட தமிழகம் முழுவதும் பல மாவட்டங்களில் பொது மக்களின் போக்குவரத்திற்கும், பாதுகாப்பிற்கும் நடவடிக்கைகளை முறையாக எடுக்காத காரணத்தால் மக்கள் பெரிதும் சிரமப்பட்டார்கள். அதே நிலை இந்த ஆண்டும் தொடரக்கூடாது.

எனவே தமிழக அரசு தற்போதைய மழைக்காலத்தில் பொது மக்கள் மழையால் பாதிக்காமல் இருக்க ஏற்கனவே தொடங்கி இன்னும் முழுமையடையாமல் இருக்கும் பணிகளை விரைந்து முடிக்கவும், மேலும் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் காலம் தாழ்த்தாமல் மேற்கொள்ளவும் முன்வர வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ்(மூ) சார்பில் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

1 More update

Next Story