மகளை கடத்தி கள்ளக்காதலனுக்கு திருமணம் செய்து வைத்த தாய் - அதிர்ச்சி சம்பவம்

கோப்புப்படம்
தாயே, மகளை கடத்தி கள்ளக்காதலனுக்கு திருமணம் செய்து வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 42 வயது பெண். இவருடைய கணவர் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். மூத்த மகள் திருமணமாகி காஞ்சீபுரம் மாவட்டத்தில் வசித்து வருகிறார். 2-வது மகளுக்கு 18 வயது ஆகிறது.
அதே பகுதியை சேர்ந்த சென்ட்ரிங் தொழிலாளி கந்தன் (வயது 31) என்பவருக்கும், 42 வயது பெண்ணுக்கும் இடையே கள்ளக்காதல் இருந்துள்ளது. இந்த நிலையில் கடந்த 13-ந்தேதி இரவு வீட்டில் இருந்த 42 வயது பெண்ணும், அவருடைய 2-வது மகளும் மாயமானதாக கீழ்கொடுங்காலூர் போலீசில் மூத்த மகள் புகார் அளித்தார்.
அதன்பேரில் போலீசார் அவர்களை தேடி வந்தனர். இந்த நிலையில் அந்த பெண்ணின் செல்போன் எண்ணை ஆய்வு செய்ததில் அவர்கள் கேரள மாநிலத்தில் இருப்பது தெரியவந்தது. அதைத் தொடர்ந்து போலீசார் கேரளாவுக்கு சென்று அந்த பகுதியில் கண்காணித்தனர். அப்போது கேரளாவில் உள்ள ஒரு தேயிலை தோட்டத்தில் தாய், மகள் மற்றும் கந்தன் ஆகியோர் இருப்பது தெரியவந்தது.
இதனையடுத்து அவர்கள் மூவரையும் கீழ்கொடுங்காலூர் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரித்தனர். விசாரணையில் இளம்பெண் தன்னை வாயில் துணியை வைத்து தாயுடன் சேர்ந்து கந்தன் கடத்தியதாகவும், அங்கு சென்று தனக்கு கட்டாய தாலி கட்டி பலாத்காரம் செய்ததாகவும் தெரிவித்தார். இதற்கு தாய் உடந்தையாக இருந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து ஆள் கடத்தல், கட்டாய திருமணம், பலாத்காரம், பெண்ணுக்கு எதிரான கொடுமை உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து கந்தன் மற்றும் இளம்பெண்ணின் தாய் ஆகிய இருவரையும் கைது செய்தனர். மீட்கப்பட்ட இளம்பெண்ணை அவரது அக்காவிடம் ஒப்படைத்தனர்.
மகளை தாயே கடத்தி கள்ளக்காதலனுக்கு திருமணம் செய்து வைத்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.






