முருக பக்தர்கள் மாநாடு: 52 நிபந்தனைகளுடன் மதுரை ஐகோர்ட்டு கிளை அனுமதி

வாகன பாஸ் கேட்டு விண்ணப்பித்தால் 24 மணி நேரத்தில் வழங்க வேண்டும் என்று கோர்ட்டு தெரிவித்துள்ளது.
மதுரை,
இந்து முன்னணி சார்பில் மதுரையில் வரும் 22-ந்தேதி முருக பக்தர்கள் ஆன்மிக மாநாடு நடைபெற உள்ளது. ஆனால், மாநாட்டு வளாகத்தில் அறுபடை வீடுகளின் மாதிரி அமைத்து பூஜைகள் நடத்த காவல்துறை அனுமதி மறுத்தது. இந்நிலையில் காவல்துறை விதித்த 6 நிபந்தனைகளை மாற்றியமைக்கக் கோரி இந்து முன்னணி சார்பில் மதுரை ஐகோர்ட்டு கிளையில் வழக்கு தொடரப்பட்டது.
அதேபோல முருகன் மாநாடு மற்றும் அறுபடை வீடுகள் அமைக்க அனுமதி வழங்கக் கூடாது என அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கம் சார்பில் இடையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்கள் நீதிபதி புகழேந்தி தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தன. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி, மாநாட்டு வளாகத்தில் அறுபடை வீடுகள் அமைத்து பூஜை நடத்தவும், இந்து முன்னணி சார்பில் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்ட நிபந்தனைகளை மாற்றம் செய்தும் உத்தரவு பிறப்பித்தார்.
மேலும் நீதிபதி தனது உத்தரவில், "அரசியலமைப்பு சட்டம் வழங்கியுள்ள மத சுதந்திரம் என்பது சட்டம் - ஒழுங்கு, மத நல்லிணக்கத்தை பாதுகாப்பதாக இருக்க வேண்டும். இந்த மாநாடு அரசியலுக்காக நடத்தப்படுகிறது என இடையீட்டு மனுதாரர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். அதற்கு ஆதாரமாக இந்து முன்னணி மாநில தலைவர் மற்றும் மத்திய மந்திரியின் பேட்டிகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
மத அமைப்புகளை அரசியலுக்காக பயன்படுத்தினால் அது தொடர்பாக 1988-ன் கீழ் உரிய நடவடிக்கை எடுக்கலாம். அதே நேரம் வாகன பாஸ் கேட்டு விண்ணப்பித்தால் 24 மணி நேரத்தில் வழங்க வேண்டும். மறுத்தால் உரிய காரணத்தை தெரிவிக்க வேண்டும்.
மாநாட்டு வளாகத்தில் 2 டிரோன்கள் மட்டும் பறக்கவிட அனுமதி அளிக்கப்படுகிறது. அறுபடை வீடுகளின் மாதிரி அமைக்க அறநிலையத்துறை, மாநகராட்சியிடம் அனுமதி பெற வேண்டியதில்லை, மாநாடு நடைபெறும் இடத்தில் வீடுகள், பள்ளிகள் இருப்பதால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என அரசு தரப்பு கூறுவத ஏற்க முடியாது. ஏனெனில் அந்த இடத்தில் ஏற்கெனவே பல்வேறு கட்சிகளின் மாநாடுகள் நடத்த போலீஸ் அனுமதி வழங்கியுள்ளது.
மாநாடு நடைபெறும் இடத்தின் முன்பு தேசிய நெடுஞ்சாலை இருப்பதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் இருக்க காவல் துறை பாதுகாப்பு பணிகளில் ஈடுபட வேண்டும். மாநாட்டால் மத நல்லிணக்கம் சீர்குலைக்கப்பட வாய்ப்பு இருப்பதாக அரசு தரப்பு தெரிவித்துள்ளது. அதற்கு ஆதாரமாக திருப்பரங்குன்றம் ஆர்ப்பாட்டத்தில் சிலரின் உரைகளை அரசு சுட்டிக்காட்டியுள்ளது. ஆகவே, முருகன் மாநாட்டில் மத நல்லிணக்கம் காப்பாற்றப்படுவதை உறுதி செய்ய வேண்டும்" என்று நீதிபதி தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.






