வடகிழக்குப் பருவமழை: கட்டுப்பாட்டு மையத்தில் கண்காணிப்பு நடவடிக்கைகளைப் பார்வையிட்டு மேயர் பிரியா ஆய்வு

வடகிழக்குப் பருவமழை தொடர்பாக மேற்கொள்ளப்படும் கண்காணிப்பு நடவடிக்கைகளை மேயர் பிரியா பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
வடகிழக்குப் பருவமழையினை முன்னிட்டு, மேயர் பிரியா டெமல்லஸ் சாலையில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகள் மற்றும் ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தில் மேற்கொள்ளப்படும் கண்காணிப்பு நடவடிக்கைகளைப் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-
வடகிழக்குப் பருவமழையினை முன்னிட்டு, இன்று மேயர் பிரியா திரு.வி.க. நகர் மண்டலம், வார்டு-77, டெமல்லஸ் சாலையில், முனுசாமி கால்வாய் அருகில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகளைப் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
மழைநீர் வடிகால் பணிகளை ஆய்வு மேற்கொண்ட மேயர் பிரியா இப்பகுதியில் போக்குவரத்து சீராகச் செல்லும் வகையில், சாலையினை சீரமைத்து பாதுகாப்புடன் பணிகளை மேற்கொள்ளவும், கால்வாயில் தங்கு தடையின்றி மழைநீர் செல்லும் வகையில் கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
இதனைத் தொடர்ந்து, ரிப்பன் கட்டட வளாகத்தில் உள்ள ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தில் வடகிழக்குப் பருவமழை தொடர்பாக மேற்கொள்ளப்படும் கண்காணிப்பு நடவடிக்கைகளைப் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






