முத்திரை திட்டங்களின் முன்னேற்றம் குறித்து முதல்-அமைச்சர் தலைமையில் ஆய்வுக்கூட்டம்

தலைமைச் செயலகத்தில் துறைச் செயலாளர்களுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
சென்னை,
தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வரும் முத்திரை திட்டங்களின் (Iconic Projects) முன்னேற்றம் குறித்து தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;-
“தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று (22.12.2025) தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு அரசின் முத்திரை திட்டங்களின் (Iconic Projects) முன்னேற்றம் குறித்து தொடர்புடைய துறைச் செயலாளர்களுடன் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
மாநிலத்தின் சமூகப் பொருளாதார கட்டமைப்பில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு பல்வேறு அரசு துறைகளின் சார்பில் செயல்படுத்தப்படும் பெரிய அளவிலான பயன்தரக்கூடிய உள்கட்டமைப்பு திட்டங்களான முத்திரைத் திட்டங்களை குறித்த காலத்திற்குள் திட்டமிட்டபடி நிறைவேற்றுவதற்கும், பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்கும் அத்திட்டங்களின் முன்னேற்றத்தினைத் கண்காணித்திட தொடர்ந்து ஆய்வுக் கூட்டங்கள் தமிழ்நாடு முதல்-அமைச்சர், துணை முதல்-அமைச்சர் மற்றும் அரசு தலைமைச் செயலாளர் ஆகியோரால் நடத்தப்பட்டு வருகிறது.
தொடக்கத்தில் 155 திட்டங்களுடன் தொடங்கப்பட்ட இத்திட்டம், பின்னர் பல புதிய திட்டங்களும் சேர்க்கப்பட்டு தற்போது 24 துறைகளைச் சேர்ந்த சுமார் 3,17,69 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான 288 திட்டங்கள் முத்திரைத் திட்டங்களாக அடையாளம் காணப்பட்டு, அதன் செயல்பாடுகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. அவற்றில் 85 திட்டங்கள் இதுவரை முடிக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளது. மீதமுள்ள திட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது.
தமிழ்நாடு முதல்-அமைச்சர் இன்றையதினம் 6 துறைகளைச் சார்ந்த சுமார் 87,941 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான செயல்பாட்டில் உள்ள 27 முத்திரைத் திட்டங்களின் பணி முன்னேற்றம் குறித்து தொடர்புடைய துறைச் செயலாளர்களுடன் ஆய்வு மேற்கொண்டு பணிகளை விரைந்து செயல்படுத்தி ஜனவரி 2026-க்குள் முடித்து பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டுமென்று அறிவுறுத்தினார்.
நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் கீழ் சிவகங்கை, மதுரை, நாகப்பட்டினம், திருவாரூர், ராமநாதபுரம், திண்டுக்கல், விருதுநகர் மற்றும் தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டு வரும் கூட்டு குடிநீர் திட்டங்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டு, அப்பணிகளை விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டுமென்று முதல்-அமைச்சர் அறிவுறுத்தினார். அத்துடன், மதுரை, வண்டியூர் ஏரி மேம்பாட்டுத் திட்டத்தினையும் விரைந்து முடித்திட உத்தரவிட்டார்.
வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறையின் கீழ் செயல்படுத்தப்பட்டு வரும் குத்தம்பாக்கம் மற்றும் செங்கல்பட்டு பேருந்து நிலையப் பணிகளின் முன்னேற்றத்தினை ஆய்வு செய்து, அப்பணிகளை விரைந்து முடித்து மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டுமென்று அறிவுறுத்தினார். அதுபோல, கிளாம்பாக்கம், கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தில் இருந்து நெடுஞ்சாலையை கடப்பதற்கான வான்வழி நடைபாதைப் பணியினையும் விரைந்து முடிந்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டுமென்று தெரிவித்தார்.
சென்னை மெட்ரோ இரயில் (Phase– II) கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும், பூந்தமல்லி முதல் வடபழனி வரையிலான பணியினை பிப்ரவரி 2026-க்குள் முடித்து மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டுமென்று முதல்-அமைச்சர் அறிவுறுத்தினார். இதுபோன்று, 6 துறைகளால் செயல்படுத்தப்பட்டு வரும் பிற முத்திரைத் திட்டங்களையும் விரைந்து முடித்து மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டுமென்று தெரிவித்தார்.
இக்கூட்டத்தில், துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தலைமைச் செயலாளர் நா.முருகானந்தம், பொதுப்பணித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் மங்கத் ராம் சர்மா, சிறப்பு திட்ட செயலாக்கத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் பிரதீப் யாதவ் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.”
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






