எஸ்.ஐ.ஆர். பணி: வாக்காளர் பட்டியல் பார்வையாளர்களை நியமித்தது தேர்தல் ஆணையம்

எஸ்.ஐ.ஆர். பணி தொடர்பாக வாக்காளர் பட்டியல் பார்வையாளர்களை இந்திய தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது.
சென்னை,
தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
01.01.2026-ஐ தகுதி தேதியாகக் கொண்டு நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் - 2026 தொடர்பாக, தமிழ்நாட்டிற்கான சிறப்பு வாக்காளர் பட்டியல் பார்வையாளர்களாக (Special Roll Observers) கீழ்க்காணும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை இந்திய தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது.
அதன்விவரம்:-
1. ராமன் குமார், ஐ.ஏ.எஸ்., இணை செயலாளர், கூட்டுறவு அமைச்சகம், புதுடெல்லி
ஒதுக்கப்பட்ட மாவட்டங்கள்:- (திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி)
2 குல்தீப் நாராயண், ஐ.ஏ.எஸ்., இணை செயலாளர், வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம், புதுடெல்லி. ( சேலம், நாமக்கல், ஈரோடு, திருப்பூர், நீலகிரி, கோயம்புத்தூர், திண்டுக்கல், கிருஷ்ணகிரி, தருமபுரி)
3 நீரஜ் கர்வால், ஐ.ஏ.எஸ்., மேலாண்மை இயக்குநர், இந்திய வர்த்தக மேம்பாட்டு நிறுவனம் புதுடெல்லி. (திருச்சிராப்பள்ளி, கரூர், பெரம்பலூர், அரியலூர், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர்)
4 விஜய் நெஹ்ரா, ஐ.ஏ.எஸ்., இணை செயலாளர், சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம், புதுடெல்லி. (புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை, தேனி, விருதுநகர், இராமநாதபுரம், தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி)
மேற்கண்ட சிறப்பு வாக்காளர் பட்டியல் பார்வையாளர்கள், மாநிலம் முழுவதும் நடைபெறும் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தத்தின் அனைத்து கட்டங்களிலும் குறிப்பாக கணக்கீட்டு கட்டம், உரிமை கோரல்கள் மற்றும் மறுப்புரைகள் பெறும் காலம், அறிவிப்பு கட்டம் மற்றும் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு வரை மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளை முழுமையாகக் கண்காணிப்பர். மேலும் இவர்கள் இந்திய தேர்தல் ஆணையம் வழங்கிய அனைத்து வழிகாட்டுதல்களும் முறையாக செயல்படுத்தப்படுவதை கண்காணிப்பதுடன் வாக்காளர் பட்டியலில் தகுதி வாய்ந்த எவரும் விடுபடக் கூடாது மற்றும் தகுதியற்ற எவரும் சேர்க்கப்படக் கூடாது என்ற அடிப்படைக் கொள்கை பின்பற்றப்படுவதையும் உறுதி செய்வர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






