சிவகங்கை: ஜல்லிக்கட்டு போட்டிக்கான இடங்கள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய சென்னை ஐகோர்ட்டு மதுரை கிளை உத்தரவு

அரசு வழிகாட்டுதல்களை பின்பற்றி ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த வேண்டும் என மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
மதுரை,
பொங்கல் பண்டிகையையொட்டி, தமிழகத்தில் உலக புகழ் பெற்ற ஜல்லிக்கட்டு போட்டிகள் அதிக முக்கியத்துவம் பெறும். இதற்காக காளைகள் பல மாதங்களுக்கு முன்பே அவற்றை வளர்ப்பவர்களால் போட்டிக்காக சிறப்பாக தயார் செய்யப்படும்.
இந்நிலையில், சிவகங்கையில் அரசு நிர்ணயித்த விதிமுறைகளை முறையாக பின்பற்றாமல், அனுமதிக்கப்படாத இடங்களில் ஜல்லிக்கட்டு மற்றும் மஞ்சுவிரட்டு நடத்தப்படுகிறது என கூறப்பட்டது. இதுதொடர்பாக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதுபற்றி அரசு பதில் மனு தாக்கல் செய்யும்படி கோர்ட்டும் கேட்டிருந்தது.
இந்நிலையில், அரசு வழிகாட்டுதல்களை பின்பற்றி ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் என மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
இந்த சூழலில், சிவகங்கை மாவட்டத்தில் அரசால் அனுமதிக்கப்படாத இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த அனுமதிக்க கூடாது என தொடரப்பட்ட வழக்கில், சிவகங்கை மாவட்டத்தில் 45 இடங்களில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது என தமிழ்நாடு அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அப்படி ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி அளிக்கப்பட்ட 45 இடங்கள் எவை என அறிக்கை தாக்கல் செய்யும்படி அரசுக்கு, சென்னை ஐகோர்ட்டு மதுரை கிளை உத்தரவு பிறப்பித்து உள்ளது.






