சீரான நீர்வரத்து: குற்றால அருவிகளில் குளிக்க அனுமதி

மழை சற்று குறைந்த நிலையில், அருவிக்கு சீராக தண்னீர் வந்துகொண்டிருக்கிறது.
தென்காசி,
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பெய்து வரும் நிலையில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது. தென்காசி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி அமைந்துள்ள குற்றால அருவிகளான மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம், சிற்றருவி, புலி அருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் குளிப்பதற்காக சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து காணப்படுகிறது. கார்த்திகை மாதம் பிறந்துள்ள நிலையில் சபரிமலை கோவிலுக்கு மாலை அணிந்து செல்லும் பக்தர்கள், குற்றாலம் வந்து அருவிகளில் நீராடி விட்டு செல்கின்றனர். இதனால் குற்றாலம் அருவிகளில் கூட்டம் நிரம்பி காணப்பட்டு வருகிறது.
இதற்கிடையே, நெல்லை மற்றும் தென்காசி மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் கடந்த நில நாட்களாக கனமழை பெய்து வரும் நிலையில் குற்றாலம் அருவிகளுக்கு வரும் நீர்வரத்து அதிகரித்தது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குற்றாலம் மெயின் அருவியில் குளிக்க கடந்த 3 நாட்களாக தடை விதிக்கப்பட்டது.
தற்போது மழை சற்று குறைந்த நிலையில், அருவிக்கு சீராக தண்னீர் வந்துகொண்டிருக்கிறது. இதையடுத்து, குற்றால அருவிகளில் குளிக்க தற்போது அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சபரிமலை சீசன் காரணமாக அருவிக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.






