ரெயிலில் இருந்து தவறி விழுந்த ஸ்டேஷன் மாஸ்டர்: பணி செய்யும் நிலையத்திலேயே உயிரிழந்த சோகம்

மதுரை அருகே கள்ளிக்குடி ரெயில் நிலையத்தில் ரெயிலில் ஏற முயன்ற ஸ்டேஷன் மாஸ்டர் தவறி விழுந்து பலியானார்.
திருமங்கலம்,
கேரள மாநிலத்தை சேர்ந்த அனுசேகர், மதுரை மாவட்டம் கள்ளிக்குடி ரெயில்வே ஸ்டேஷன் மாஸ்டராக பணிபுரிந்து வருகிறார். 32 வயதாகும் இவருக்கு திருமணமாகி 4 மாத கைக்குழந்தை உள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு கள்ளிக்குடி ரெயில் நிலையத்தில் ஸ்டேஷன் மாஸ்டராக நியமிக்கப்பட்டவர். அப்பகுதியிலேயே வாடகை வீட்டில் வசித்தபடி வேலைக்கு சென்று வந்தார். குடும்பத்தினரை பார்க்க அவ்வப்போது சொந்த ஊருக்கும் சென்றும் வந்தார்.
இந்நிலையில் நேற்று மதியம் 12 மணிக்கு அவருக்கு பணி நேரம் ஒதுக்கப்பட்டு இருந்தது. அதற்கு முன்பு மதுரை சென்று வர அவர் முடிவு செய்தார். இந்த சூழலில் செங்கோட்டையில் இருந்து ஈரோடு செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று காலை கள்ளிக்குடி வந்தது. அப்போது அந்த ரெயிலில் ஏற முயன்ற போது அவர் கால் தவறி நடைமேடைக்கும் ரெயிலுக்கும் இடையில் விழுந்ததால் தலையில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் விருதுநகர் ரெயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் கள்ளிக்குடி பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.






