பூண்டி ஏரியில் இருந்து உபரிநீர் திறப்பு நிறுத்தம்

கடந்த சில நாட்களுக்கு முன்பு குடிநீர் ஏரிகளில் இருந்து உபரி நீர் திறந்து விடப்பட்டது.
சென்னை ,
சென்னை நகர மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக பூண்டி, புழல் செம்பரம்பாக்கம், சோழவரம், கண்ணன்கோட்டை ஏரிகள் உள்ளன. தற்போது குடிநீர் ஏரிகள் முழு கொள்ளளவு எட்டியுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு குடிநீர் ஏரிகளில் இருந்து உபரி நீர் திறந்து விடப்பட்டது.
பூண்டி ஏரியிலிருந்து அதிகபட்சமாக வினாடிக்கு 14 ஆயிரம் கனஅடியும், புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளில் இருந்து வினாடிக்கு 1200 கன அடியும் திறக்கப்பட்டது. இதற்கிடையே ஏரிகளின் நீர்ப்பிடிப்பு பகுதி, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பலத்த மழை இல்லாததால் ஏரிகளில் இருந்து உபரி நீர் திறப்பு படிப்படியாக குறைக்கப்பட்டது. நேற்று காலை முதல் பூண்டி, புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளில் இருந்து தண்ணீர் திறப்பு முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது.
நேற்று காலை நிலவரப்படி பூண்டி ஏரிக்கு வினாடிக்கு 1,130 கனஅடியும், சோழவரம் ஏரிக்கு வினாடிக்கு 27 கன அடியும், புழல் ஏரிக்கு 315 கனஅடியும், செம்பரம்பாக்கம் ஏரிக்கு வினாடிக்கு 200 கன அடியும் தண்ணீர் வந்து கொண்டிருந்தது.
வரும் நாட்களில் மழை தீவிரம் அடைந்தால் உபரி நீர் திறக்கப்படும் என நீர் ஆதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். செம்பரம்பாக்கம் ஏரியின் உயரமான 25 அடியில் 20.90 அடி தண்ணீர் இருப்பு உள்ளது.
பூண்டி ஏரியின் உயரமான 35 அடியில் 32.82 அடி தண்ணீரும், புழல் ஏரியின் உயரமான 21.20 அடியில் 18.57 அடியும், செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த உயரமான 25 அடியில் 20.90 அடி தண்ணீரும் இருப்பு உள்ளது.






