தமிழக சட்டசபை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு

முதல்-அமைச்சரின் பதிலுரையை தொடர்ந்து சட்டசபை கூட்டத்தொடர் நிறைவு பெற்றது.
தமிழக சட்டசபை கடந்த 20-ந்தேதி கவர்னர் உரையுடன் தொடங்கியது. ஆனால், தமிழ்த்தாய் வாழ்த்துக்கு பிறகு தேசிய கீதம் பாடப்படவில்லை என்று குற்றம்சாட்டி தனது உரையை புறக்கணித்து கவர்னர் ஆர்.என்.ரவி வெளியேறினார். அதன்பிறகு, கவர்னரின் தமிழாக்க உரையை சபாநாயகர் மு.அப்பாவு வாசித்தார். இது அவைக்குறிப்பில் ஏற்றப்பட்டது.
அடுத்த நாள் (21-ந்தேதி) சேந்தமங்கலம் தொகுதி திமுக எம்.எல்.ஏ. பொன்னுசாமி மறைவுக்கு இரங்கல் தீர்மானம் கொண்டுவந்து அவை நடவடிக்கை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில், 22-ந்தேதி முதல், கவர்னரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் தொடங்கியது. இந்த விவாதத்தில் பங்கேற்று ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேசினார்கள்.
இதனைத் தொடர்ந்து, இன்று சட்டசபையில் கவர்னரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலுரை வழங்கினார். முதல்-அமைச்சரின் பதிலுரையை தொடர்ந்து சட்டசபை கூட்டத்தொடர் நிறைவு பெற்றது. இதையடுத்து தமிழக சட்டசபை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.






