‘உயர்கல்வியில் நாட்டிலேயே முதன்மை மாநிலம் தமிழ்நாடு’ - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்

என்.ஐ.ஆர்.எப். பட்டியலில் அனைத்திலும் அதிக கல்வி நிறுவனங்களுடன் தமிழ்நாடு முதன்மையான இடத்தைப் பெற்றிருக்கிறது என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை,
உயர்கல்வியில் நாட்டிலேயே முதன்மை மாநிலம் தமிழ்நாடு என்பது மீண்டும் ஒருமுறை நிரூபணம் ஆகியுள்ளதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ‘எக்ஸ்’ தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது;-
“2025-ம் ஆண்டிற்கான என்.ஐ.ஆர்.எப்.(NIRF) தரவரிசைப் பட்டியல் மூலம் உயர்கல்வியில் நாட்டிலேயே முதன்மை மாநிலம் தமிழ்நாடு என்று மீண்டும் ஒருமுறை நிரூபணம் ஆகியுள்ளது. இந்தியாவின் தலைசிறந்த 100 உயர்கல்வி நிறுவனங்களில் 17, தலைசிறந்த 100 கல்லூரிகளில் 33, தலைசிறந்த 50 மாநிலப் பல்கலைக்கழங்களில் 10 என இப்பட்டியல் அனைத்திலும் அதிக கல்வி நிறுவனங்களுடன் தமிழ்நாடு முதன்மையான இடத்தைப் பெற்றிருக்கிறது.
அனைவரையும் உள்ளடக்கிய, அனைத்துப் பகுதிகளுக்கும் பரவிய, அனைத்துப் பின்னணியில் இருந்து வரும் மாணவர்களையும் வரவேற்று வாய்ப்பளிக்கும் தமிழ்நாட்டின் உயர்கல்விச் சூழலுக்குக் கிடைத்த வெற்றி இது.”
இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.






