டிசம்பர் 16-ந் தேதி முதல் டாஸ்மாக் பணியாளர்கள் காலவரையற்ற காத்திருப்பு போராட்டம்

டிசம்பர் 16-ந் தேதி முதல் டாஸ்மாக் பணியாளர்கள் காலவரையற்ற காத்திருப்பு போராட்டம் நடத்த உள்ளனர்.
சென்னை,
தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர் சங்கத்தின் (ஏஐடியூசி) மாநில செயற்குழுக் கூட்டம் நேற்று (11.11.2025) செவ்வாய்க்கிழமை, சென்னை, சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள தமிழ்நாடு ஏஐடியூசி அலுவலகத்தில், சங்கத் தலைவர் நா. பெரியசாமி முன்னாள் எம்.எல்.ஏ. தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில் தமிழ்நாடு ஏஐடியூசி பொதுச் செயலாளர் எம். இராதாகிருஷ்ணன், டாஸ்மாக் பணியாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர் த தனசேகரன், பொருளாளர் கே. கோவிந்தராஜ், துணைத் தலைவர்கள் மதுரை எஸ். பாலச்சந்திரன், திருச்சி ராயப்பன், செயலாளர்கள் எம். செல்வம், சி. மாரி, ஆர் . இளங்கோ, பி. எம். மணிகண்டன், திண்டுக்கல் ஆர் மணிகண்டன் உள்ளிட்ட மாநில, மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
டாஸ்மாக் பணியாளர்களின் கோரிக்கைகள் மீது தமிழ்நாடு அரசும், நிர்வாகமும் திறந்த மனதுடன் நேர்மறை அணுகுமுறையோடு பேசி தீர்வு காண வேண்டும் என மாநில செயற்குழுக் கூட்டம் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது. பணி நிரந்தரம், காலமுறை ஊதியம், ஓய்வூதியம் உள்ளிட்ட கோரிக்கைகள் சட்டபூர்வமாக தமிழ்நாடு அரசு நிறைவேற்ற வேண்டிய கோரிக்கைகளாகும்.
ஆனால், டாஸ்மாக் நிர்வாகம் அந்தக் கோரிக்கைகள் அரசு கொள்கை முடிவு எடுத்து, ஒப்புதல் தர வேண்டிய கோரிக்கைகள் என்று தொடர்ந்து கூறி வருவதால், டாஸ்மாக் பணியாளர்களின் பணி நிரந்தரம், காலமுறை ஊதியம், ஓய்வூதியம் உள்ளிட்ட கோரிக்கைகள் மீது தமிழ்நாடு அரசு கொள்கை முடிவு எடுக்க வேண்டும் என வலியுறுத்தி, டிசம்பர் (16.12.2025) செவ்வாய்க்கிழமை முதல், சங்கத்தின் தலைவர் நா.பெரியசாமி தலைமையில், மேலாண்மை இயக்குநர் அலுவலகம் முன்பாக கூடி பேரணியாக சென்று,அரசின் தலைமைச் செயலகம் முன்பாக காலவரையற்ற காத்திருப்புப் போராட்டத்தை மேற்கொள்வது என்று சங்கத்தின் மாநில செயற்குழு ஒரு மனதாக முடிவு செய்துள்ளது.
தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர் சங்கம் (ஏஐடியூசி) முன் வைத்துள்ள பணி நிரந்தரம், காலமுறை ஊதியம், ஓய்வூதியம் உள்ளிட்ட கோரிக்கைகள் நிறுவனத்தில் பணிபுரியும் அனைத்துப் பணியாள்களுக்குமான கோரிக்கைகளாகும்.
இந்தக் கோரிக்கைகள் கட்சி அரசியல் சார்ந்ததோ, சங்க கருத்தோட்டங்கள் கொண்டதோ, அரசுக்கு எதிராகவோ முன் வைக்கப்பட்டதல்ல, 23 ஆண்டுகளாக தொடரும் பணிப்பாதுகாப்பற்ற நிலைக்கு முடிவு கண்டு, ஒட்டு மொத்த டாஸ்மாக் பணியாளர்களின் கண்ணியமான வாழ்வுரிமைக்கான கோரிக்கைகளாகும் என்பதை கருத்தில் கொண்டு அனைத்துப் பணியாளர்களும் காலவரையற்ற காத்திருப்புப் போராட்டத்தில் பங்கேற்று, கோரிக்கைகள் வெற்றி பெற ஆதரவும், ஒத்துழைப்பும் வழங்குமாறு பணியாளர்கள் அனைவரையும் மாநில செயற்குழுக் கூட்டம் கேட்டுக் கொள்கிறது.






